Home இலங்கை அரசியல் இந்திய வம்சாவளி மலையக மக்களுக்கு தேவையான உதவிகளை இந்தியா வழங்கும்: எஸ். ஜெய்சங்கர் உறுதி

இந்திய வம்சாவளி மலையக மக்களுக்கு தேவையான உதவிகளை இந்தியா வழங்கும்: எஸ். ஜெய்சங்கர் உறுதி

0

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக மக்களுக்கு தேவையான உதவிகளை இந்தியா
தொடர்ந்து வழங்கும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர்
இ.தொ.கா. பிரதிநிதிகளிடம் கூறினார் என்று இ.தொ.காவின் தவிசாளரும், நுவரெலியா
மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.
ஜெய்சங்கருக்கும்(jaishankar), இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான
சந்திப்பு இந்திய இல்லத்தில் இன்று (20.06.2024) நடைபெற்றது.

இ.தொ.காவின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான்(Senthil Thondaman),
இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு
வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான்(Jeevan Thondaman), இ.தொ.காவின் தவிசாளர்
மருதபாண்டி ராமேஷ்வரன் ஆகியோர் இச்சந்திப்பில் பங்கேற்றனர்.

இந்திய வம்சாவளி மலையக மக்கள்

பாரத பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் மீண்டும் வெளிவிவகார அமைச்சராக
பதவியேற்றுள்ள ஜெய்சங்கருக்கு இ.தொ.கா பிரதிநிதிகள் வாழ்த்துகள் தெரிவித்தனர்.பிரதமர் மோடிக்கும் வாழ்த்துகளை மீண்டும் கூறினர்.

அதேபோல இலங்கை – இந்திய உறவு வலுவாக இருப்பதாகவும் அதனை மேலும்
பலப்படுத்துவதற்கு இ.தொ.கா உறவுபாலமாக செயற்படும் எனவும் இந்திய வெளிவிவகார
அமைச்சரிடம் இ.தொ.கா பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.

இந்திய வீட்டு திட்டம், மலையகத்துக்கான ஆன்மீக சுற்றுலா உட்பட மேலும் பல
விடயங்கள் தொடர்பிலும் இதன்போது பேசப்பட்டுள்ளன.

அதேவேளை மலையக மக்களுக்காக இந்தியாவால் முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டங்களை
நினைவுகூர்ந்த வெளிவிவகார அமைச்சர், எதிர்காலத்திலும் உதவிகள் தொடரும் எனவும்
குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version