இந்திய(India) வம்சாவளியை சேர்ந்த பெண்ணான விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்(Sunita Williams) சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு வெற்றிகரமாக பயணித்துள்ளார்.
குறித்த பயணம் 3 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நேற்று(05) அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கான பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
25 மணி நேர பயணம்
போயிங் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்ட ஸ்டார்லைனர் விண்கலத்தில் நாசா விண்வெளி வீரர் புட்ச் வில்மோர்(Butch Wilmore) மற்றும் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்ல இருந்தனர்.
எனினும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் பயணம் தடைபட்டது.
இதனையடுத்து, தொழில் நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்ட நிலையில் நேற்று(05) போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் அமெரிக்க கடற்படை கேப்டன் புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் உடன் விண்வெளி நிலையம் நோக்கி புறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இரு விண்வெளி வீரர்களும் 25 மணி நேர பயணத்திற்குப் பிறகு இன்று(06) சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், அவர்கள் சுமார் ஒரு வாரம் வரை சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வுகளை மேற்கொண்டு ஜூலை 14 ஆம் திகதி பூமிக்கு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, சுனிதா வில்லியம்ஸ் இதற்கு முன்னதாக இரண்டு முறை விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் தற்போது 3ஆவது முறையாக பயணம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Source: https://tamilwin.com/article/indian-origin-woman-s-third-space-mission-1717617913
