Home இலங்கை சமூகம் களுத்துறையில் உயிரிழந்த யாழ் இளைஞன்: அச்சுவேலியில் இறுதி அஞ்சலி

களுத்துறையில் உயிரிழந்த யாழ் இளைஞன்: அச்சுவேலியில் இறுதி அஞ்சலி

0

களுத்துறையில் (Kalutara) நீராட சென்றபோது உயிரிழந்த யாழ்ப்பாணத்தைச் (Jaffna) சேர்ந்த பொது சுகாதார பரிசோதகரின் பூதவுடல் இறுதிக் கிரியைகளுக்காக அச்சுவேலி பத்தமேனியிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் திகதி அவித்தாவ, எத்தாவெட்டுனுவல பகுதியில் நீராட சென்றபோது பொது சுகாதார பரிசோதகரான சிவயோகபதி கௌதமன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

குறித்த இளைஞன் மொரட்டுவ பிரதேசத்தில் கடந்த ஐந்து வருடங்களாக பொது சுகாதார பரிசோதராக கடமையாற்றியுள்ளார்.

இளைஞனின் பூதவுடல்

டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் குழுவினர் மற்றும் நான்கு பொது சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவொன்று குளத்தில் நீராடச் சென்ற போதே அனர்த்தத்தில் சிக்கியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை மொரட்டுவை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கடமையாற்றிய 28 வயதான ஹர்ஷநாத் என்ற மற்றுமொரு பொது சுகாதார உத்தியோகத்தரும் உயிரிழந்துள்ளார்.

இதில் எஸ். ஹர்ஷநாத் என்ற அதிகாரி மட்டக்களப்பை சேர்ந்தவராவார்.

இந்த நிலையில் அச்சுவேலி இளைஞனின் பூதவுடல் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று (27) மதியம் ஒரு மணியளவில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://tamilwin.com/article/inspection-of-public-health-inspector-in-jaffna-1724742787

NO COMMENTS

Exit mobile version