முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலிமச்சிநாதிகுளம்
பகுதியில் சந்தேகத்திற்கிடமான நிலையில் உயிரிழந்த குடும்பஸ்தர் தொடர்பில் துரித விசாரணைகளை மேற்கொள்ளுமாறு மாங்குளம் பொலிஸாரிடம் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்
வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலிமச்சநாதிகுளம்
பகுதியில் நேற்று(3) சிவபாதம் ஸ்ரீகாந்தன் என்ற 43 வயதான
குடும்பஸ்தர் காணாமல் போயிருந்தார்.
இந்தநிலையில் குறித்த காணாமல் போன
குடும்பஸ்தருடைய மேற்சட்டையும், கைத்தொலைபேசியும் புலிமச்சிநாதிகுளக்
கட்டிலிருந்து மீட்கப்பட்டிருந்ததுடன், இவ்வாறு காணாமல் போன குடும்பஸ்தரின்
விடயத்தில் பலசந்தேகங்களும் காணப்பட்டன.
தேடும் பணி
அதேவேளை, நேற்று காணாமல் போனவரது உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள்
இணைந்து புலிமச்சிநாதிகுளத்தில் காணாமல் போனவரைத் தேடும் பணியில்
ஈடுபட்டிருந்தனர்.
இருப்பினும் காணாமல் போனவரை இனங்காணமுடிந்திருக்கவில்லை.
இத்தகையசூழலில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இதுதொடர்பில் தெரியப்படுத்தப்பட்டிருந்தநிலையில், நாடாளுமன்ற
உறுப்பினர் இன்று காலையில் காணாமல் போனவருடைய வீட்டிற்குச் சென்று
அவருடைய குடும்பத்தாருடனும், உறவினர்களுடனும் கலந்துரையாடி நிலமைகளைக்
கேட்டறிந்தார்.
அத்தோடு இது தொடர்பில் ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளருடனும் கலந்துரையாடி இது
தொடர்பில் தெரியப்படுத்தியிருந்தார்.
துரித விசாரணை
அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் மாங்குளம் பொலிஸ்
நிலையத்திற்குச் சென்று, பொலிஸ் தலைமையக ஆய்வாளரைச் சந்தித்து காணாமல் போனவர்
தொடர்பில் துரித விசாரணைகளையும், துரித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு
வலியுறுத்தியிருந்தார்.
அந்தவகையில் பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் உறவினர்கள்,
ஊர்மக்களுடன் இணைந்து தேடுதல் நடவடிக்கையொன்று இன்று
மேற்கொள்ளப்படுமென மாங்குளம் பொலிஸ் தலைமையக ஆய்வாளர் இதன்போது நாடாளுமன்ற
உறுப்பினருக்கு உத்தரவாதமளித்திருந்தார்.
இந்தநிலையில் காணாமல்
போனவரைத் தேடுவதற்குரிய செயற்பாட்டில் மாங்குளம் பொலிசார் ஈடுபடத்
தயாரானநிலையில், குறித்த காணாமல் போனவர் சடலமாக புலிமச்சினாதி குளத்தில்
இனங்காணப்பட்டதாக ஊர்மக்களால் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனுக்கு
தொலைபேசியூடாகத் தெரியப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
