Home இலங்கை அரசியல் யாழில் தாக்குதலுக்குள்ளாகிய ஊடகவியலாளரின் வீடு: பின்னணியில் இராணுவத்தின் மறைகரங்கள்

யாழில் தாக்குதலுக்குள்ளாகிய ஊடகவியலாளரின் வீடு: பின்னணியில் இராணுவத்தின் மறைகரங்கள்

0

யாழில் ஊடகவியலாளரின் வீடு தாக்குதலுக்குள்ளாகி மூன்று தினங்களாகியும் இதுவரை எவரையும் காவல்துறையினர் கைது செய்யவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், குறித்த தாக்குதலின் பின்னணியில் இராணுவத்தின் மறைகரங்கள் உள்ளதெனவும் தெரிவித்துள்ளார்.

அச்சுவேலியில் தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளரின் இல்லத்தை இன்றையதினம்(16) பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இதனை தெரிவித்துள்ளார்.

 தாக்குதலுக்குள்ளாகி வீடு

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ‘‘நீண்டகாலத்திற்கு பின்னர் ஊடகவியலாளரை இலக்கு வைத்து குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதல் கடந்த 13 ம் திகதி நடைபெற்று இன்றுடன் மூன்று நாட்களாகியும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

யாழ் மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபர், காவல்துறையினர் ஆகியோர் தேடுகிறோம் பிடிக்கிறோம் என்கிறார்கள். எதுவும் நடப்பதாக இல்லை.

இதே இலங்கை அதிபரை பற்றியோ அரச உயர் அதிகாரிகள் பற்றியோ யாராவது பதிவு போட்டால் ஒரு சில மணிநேரங்களில் கைது செய்யப்படுவார்.

யாழ் மாவட்டத்தில் மூலைக்கு மூலை இராணுவம், கடற்படை, விமானப்படை காவல்துறையினர் குவிக்கப்பட்டு இருக்கும்போது எவ்வாறு இவர்களுக்கு தெரியாமல் மோட்டார் சைக்கிள்களில் துணிகரமாக வாள்கள் பொல்லுகளுடன் வரமுடிகிறது.

குற்றஞ்சாட்டும் சிறீதரன்

வீட்டுக்கு வெளியே நின்ற பேருந்து முச்சக்கரவண்டியை தாண்டி ஊடகவியலாளரின் மோட்டார் சைக்கிளை இனங்கண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

குறித்த விடயத்தை திசைதிருப்புவதற்காக திருநங்கைகள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

நாட்டின் அதிபர் பலாலி வசாவிளான் பகுதியில் காணி துண்டு விடுவிப்புக்காக வந்தபோது, காணி விடுவிக்கப்படவில்லை மக்கள் கூடியநிலையில் அது தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற த.பிரதீபன், க.பரதன் ஆகிய இரண்டு ஊடகவியலாளர்களும் இராணுவத்தினரால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகப்பட்டு இராணுவப் புலனாய்வாளர்களால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அரசாங்கம் திறந்தவெளி சிறைச்சாலைக்குள் அடக்குறைகளை விரிவுபடுத்தி பிரயோகிப்பதையே இதன்மூலம் பார்க்கமுடிகிறது. இதனை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.’’ என்றார்.

NO COMMENTS

Exit mobile version