காவல்துறையினரை கூப்பிட்டு காவல்துறை பாதுகாப்புடன் சபையை நடத்துவேன் என யாழ் மாநகர சபை முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா (Mathivathani Vivekanandarajah) தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் சட்டவிரோதமாக பிரதான வீதிக்கு குறுக்காக அமைக்கப்பட்ட விளம்பர பதாகை தொடர்பில் நேற்று (04) நடைபெற்ற யாழ் மாநகர சபை அமர்வில் கடும் அமளி துமளி ஏற்பட்டது.
இதன்போது எந்த வித முறையான அனுமதியும் இல்லாது சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விளம்பர பதாகை தொடர்பில் மாநகர சபை உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
சட்டவிரோத செயல்
அத்துடன் மாநகர முதல்வர் மற்றும் மாநகர ஆணையாளருக்கே தெரியாமல் மாநகர சபை உத்தியோகத்தர்கள் குறித்த சட்டவிரோத செயலுக்கு உடந்தையாக இருந்ததாகவும் மாநகர சபை உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினார்.
இதன்போது ஒவ்வொரு மாநகர சபை உறுப்பினர்களும் கருத்து தெரிவித்த போது மாநகர சபை அமர்வில் அமைதியின்மை ஏற்பட்டது.
இந்தநிலையில் கோபமடைந்த மாநகர முதல்வர், இவ்வாறு கூட்டத்தை நடத்த விடாமல் தொடர்ந்து செயற்பட்டால் காவல்துறையினரை கூப்பிட்டு காவல்துறையினரின் பாதுகாப்புடன் கூட்டத்தை நடத்துவேன் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/embed/BkE15ptoqAI
