Home இலங்கை அரசியல் ஒடுக்குமுறைக்கு எதிரான ஈழத்தமிழரது அரசியல் போராட்டம்: பேராசிரியர் கணேசலிங்கம் எடுத்துரைப்பு

ஒடுக்குமுறைக்கு எதிரான ஈழத்தமிழரது அரசியல் போராட்டம்: பேராசிரியர் கணேசலிங்கம் எடுத்துரைப்பு

0

ஈழத்தமிழர் அரசியல் போராட்டமானது தென்னிலங்கை ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு
எதிரானதாக அமைந்திருந்த போதும் அதன் அடிப்படை, தமிழ் மக்களது அமைவிடம்
சார்ந்ததாகவே உள்ளது என யாழ். பல்கலைக்கழக பேராசிரியர் கே.ரி. கணேசலிங்கம் தெரிவித்துள்ளார். 

யாழ். தந்தை செல்வா கலையரங்கில் நேற்று (22.07.2024) இடம்பெற்ற தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

அவர் மேலும், 

“ஈழத்தமிழர் அரசியல் போராட்டமானது, சிங்கள – தமிழ் அரசியற் பிரச்சினை மட்டுமல்ல, அதற்கும்
அப்பாலானது.

 பாக்கு நீரிணை

பிரதானமாக பாக்கு நீரிணையில் இலங்கை – இந்திய – இந்துமா கடல் தழுவிய
வகையில் உலக வல்லரசுகள் வரை நீளும் மிக கச்சிதமான வலைப்பின்னலை கொண்ட ஓர்
உள்நாட்டு, அயல் நாட்டு, பிராந்திய, சர்வதேச அரசியற் பிரச்சினைகளின் வினோதமான
வடிவங்களாகவே உள்ளன.

இங்கு தென்னிலங்கை ஆதிக்க சக்திகளிடம் அரசு உண்டு, மற்றும் இலங்கைத் தீவுடன்
தொடர்புபடும் ஏனைய சக்திகளிடமும் அரசுகள் உள்ளன. ஆனால் ஈழத் தமிழர் மட்டும்
அரசற்ற சமூகம்.

அரசற்ற ஒரு தேசிய இனம், அரசுகளைக் கொண்ட ஏனைய அனைத்து
சக்திகளுடன் முட்டும் போதும், மோதும் போதும், பொருதும் போதும் பெரிதும்
பாதிக்கப்படக் கூடியதும், சேதப்பட கூடியதுமான நிலையில் தமிழ் தேசிய இனம்
இருக்கும் என்பது ஒரு யதார்த்த நிலையாகும்.

ஆதலால் ஈழத்தமிழ் தரப்பினர் அதிக
புத்திசாலித்தனத்துடனும், அதிக இராஜதந்திர மெருகுடனும், பெரிதும் யதார்த்த
பூர்வமாக நடைமுறை சார்ந்தும் சிந்தித்து செயற்பட வேண்டும்.

அரசும் பௌத்தமும் 

தமிழ் மக்களது அரசியலில் முதலாவது அடிப்படை பாக்கு நீரிணைரனையிற்தான்
இடப்படுகிறது என்பதனை ஈழத்தமிழ் தரப்பினர் கடந்த ஒரு நூற்றாண்டுக்கு மேலாய்
புரிந்து கொண்டதாக தெரியவில்லை.

அதேவேளை, மேற்கே அரபிக் கடலையும், கிழக்கே வங்கக் கடலையும் தொடுத்து, இந்தியாவுடன்
பிணைந்து காணப்படும் பாக்கு நீரிணை என்னும் ஓர் ஒற்றை இளையில் தொங்கும் ஒரு
நாடாகவும், ஓர் அரசாகவும் இலங்கை தீவு உள்ளது.

இந்தப் பாக்கு நீரிணை இல்லையேல்
இந்தியாவின் ஒரு நிலத் தொடராய் இலங்கை இருந்திருக்க வாய்ப்புண்டு.

அப்படி ஒரு
நிலத் தொடராய் இலங்கை இருந்திருந்தால் இந்தியாவின் வடக்கில் இருந்து தெற்கு
வரை பௌத்தம் அழிந்தொழிந்தது போல் இலங்கையிலும் பௌத்தம் அழிந்தொழிந்து
இருக்கும்.

இலங்கை ஒரு தனி நாடாக இருப்பதும் சாத்தியப்பட்டு இருக்காது.
அரசும் – பௌத்தமும் பிணைந்திருப்பதற்கு பாக்குநீரிணையே பிரதான காரணமாகும்.

இலங்கை ஓர் அரசாக இருப்பதற்கு இந்த சிறிய பாக்கு நீரிணை ஒரு முக்கிய காரணமாய்
இருப்பது போலவே, இலங்கையில் இனப்பிரச்சனை இரத்தம் தோய்ந்த வடிவில்
இருப்பதற்கும் காரணமாக உள்ளது.

இந்த வகையில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும்
நடுவே அரசியல் அர்த்தத்தில் பாக்கு நீரிணை ஒருபுறம் குளிரோடையாகவும் மறுபுறம்
நெருப்பாறாகவும் விளங்குகிறது ” என சுட்டிக்காட்டியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version