யாழ்ப்பாணம் (Jaffna) வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கி
படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த
சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (25.04.2024) பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பிரதான சந்தேகநபர்
கடந்த மார்ச் மாதம் 11ஆம் திகதி காரைநகர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில்
சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த தம்பதியினரை பொன்னாலை பாலத்திற்கு
அருகில் உள்ள கடற்படை முகாமிற்கு முன்பாக வைத்து வன்முறை கும்பல் கடத்தி
சென்று கணவனை சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்துள்ளதுடன் மனைவியை
வீதியில் இறக்கி விட்டு சென்றிருந்தது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த பொலிஸார் இதுவரையில் 09 பேரை
சந்தேகத்தின் பேரில் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்களில் ஒருவர் காரைநகர்
பகுதியில் தலைமறைவாக இருந்த நிலையில் பொலிஸாரினால் கைது
செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை
எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Source: https://tamilwin.com/article/jaffna-vattukkottai-incident-one-suspect-arrested-1714116611
