Home இலங்கை அரசியல் காவல்துறை மா அதிபருக்கு எதிராக நடவடிக்கை! எம்.பி ஒருவரால் வெடித்த சர்ச்சை

காவல்துறை மா அதிபருக்கு எதிராக நடவடிக்கை! எம்.பி ஒருவரால் வெடித்த சர்ச்சை

0

தனக்கு பதாள உலக குழுக்களுடன் தொடர்புகள் இருப்பதாக காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய கூறியதற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் பதாள உலக குழுக்களுடான தொடர்புகளால் ஏற்பட்டுள்ளது என காவல்துறை மா அதிபர் அறிவித்தமையை தொடர்ந்து இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

சட்டவிரோத நடவடிக்கை

சட்டவிரோத வணிகங்களில் ஈடுபட்டுள்ள பதாள உலக நபர்களுடனான பரிவர்த்தனைகள் காரணமாகவே அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் என்ற காவல்துறை மா அதிபரின் கூற்றுக்கு பதில் அளித்த ஜகத் விதான, அந்தக் கூற்று ஆதாரமற்றது என்றும், தன்னை அவமதிக்கும் நோக்கம் கொண்டது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

“எனக்கு பாதாள உலகத்துடன் எந்த தொடர்பும் இல்லை. நான் 1989 முதல் சட்டப்பூர்வமாக வணிகத்தில் ஈடுபட்டுள்ளேன். நான் எந்த சட்டவிரோத நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை,” என்று அவர் இன்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

கோபத்தில் காவல்துறை மா அதிபர்

இந்த வார தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் சபாநாயகரின் தலையீட்டின் மூலம் காவல்துறை பாதுகாப்பைப் பெற்றதால் காவல்துறை மா அதிபர் கோபமடைந்துள்ளதாக விதான குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதேவேளை, காவல்துறை மா அதிபர் தனக்கும் பாதாள உலகக் குழுக்களுக்கும் இடையே பகைமையை உருவாக்க முயற்சிப்பதாகவும், அதன் மூலம் தனது உயிருக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதன்படி, இந்த பொறுப்பற்ற மற்றும் தீங்கிழைக்கும் கருத்துக்களுக்கு காவல்துறை மா அதிபருக்கு எதிராக தான் சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் ஜகத் விதான மேலும் தெரிவித்துள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version