Home இலங்கை அரசியல் மோடியின் விசேட செய்தியுடன் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த ஜெய்சங்கர்

மோடியின் விசேட செய்தியுடன் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த ஜெய்சங்கர்

0

புதிய இணைப்பு

நாட்டை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று காலை நாட்டை வந்தடைந்தார்.

இதன்போது கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவரை, இலங்கையின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோர் ஜெய்சங்கர் உள்ளிட்ட குமுவினரை வரவேற்றனர்.

ஜெய்சங்கரின் இலங்கை விஜயத்தின்போது, ​​இந்திய – இலங்கை உறவுகளில் மூன்று மைல்கற்கள் எட்டப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

மேலும், பிரதமர் தினேஸ் குணவர்த்தனவையும் அவர் சந்தித்துள்ளார்.

இதன்போது அபிவிருத்தி மற்றும் தொடர்புகளுக்கான முன்னெடுப்புகள் ஊடாக இந்தியாவின் வலுவான ஆதரவு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய வீடமைப்பு திட்டம்

இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் கண்டி, நுவரெலியா, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் 106 வீடுகளுக்கான நினைவுப் படிகங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜெய்சங்கர் கூட்டாக இணைந்து நிகழ்நிலை ஊடாக திறந்துவைத்தனர்.

அத்துடன், கொழும்பு, திருகோணமலை ஆகிய நகர்களிலுள்ள மாதிரிக் கிராமத்திலும் 24 வீடுகள் மெய்நிகர் ஊடாக பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.

மேலும் 6 மில்லியன் டொலர் இந்திய நிதியுதவியுடன் இலங்கையில் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தை (MRCC) உத்தியோகபூர்வமாக ஆரம்பிப்பதைக் குறிக்கும் நினைவுப் படிகம் இதன்பொது திறந்துவைக்கப்பட்டது.

இதில் கொழும்பில் உள்ள கடற்படைத் தலைமையகத்தில் ஒரு மையம், ஹம்பாந்தோட்டையில் துணை மையம், காலி, அருகம்பே, மட்டக்களப்பு, திருகோணமலை, கல்லாறு, பருத்தித்துறை, மொல்லிக்குளம் ஆகிய பிரதேசங்களின் ஆள்ளில்லா கட்டுப்பாட்டு மையங்களும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு

இலங்கை – இந்திய இருதரப்பு பங்குடைமையின் பரந்தளவான விடயங்கள் குறித்து ஆராயும் முகமாக
இந்திய வெளிவிவகார அமைச்சர் அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கர்(S. Jaishankar) நாட்டை வந்தடைந்துள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட செய்தியுடன் இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் . ஜெய்சங்கர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளார். 

இந்தியப் பிரதமர் மோடியின் புதிய அரசாங்கத்தின்கீழ் வெளிவிவகார அமைச்சர் மேற்கொள்ளும் முதலாவது இருதரப்பு விஜயம் இதுவாகும்.

அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் கொள்கையின் அடிப்படையாக அவரின் முதல் விஜயம் அமைந்துள்ளது.

இலங்கை –  இந்தியா

கடல்மார்க்கமாக மிகவும் நெருக்கமான அயல் நாடாகவும் காலங்காலமாக நல்லுறவைக்கொண்ட இலங்கைக்கு இந்தியாவினது தொடர்ச்சியான அர்ப்பணிப்பினை சுட்டிக்காட்டும் முகமாக இந்த விஜயம் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த விஜயத்தின் போது அவர், பிரதமர் தினேஸ் குணவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அமைச்சர் ஜீவன் தொண்டமான், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதிநிதிகள், இலங்கை தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார்.

இதேவேளை, இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் நுவரெலியா, கண்டி மற்றும் மாத்தளை உள்ளிட்ட மாவட்டங்களில் நிர்மாணிக்கப்பட்டு சகல உட்கட்டமைப்பு வசதிகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ள 109 வீடுகளையும் மெய்நிகர் ஊடாக உத்தியோகபூர்வமாக பொதுமக்களிடம் கையளிக்கவுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது டில்லி விஜயத்தின் போது இலங்கைக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

அதற்கமைய எதிர்வரும் ஆகஸ்டில் அவர் இலங்கை வரக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அது குறித்து ஆராய்வது காலநிதி ஜெய்சங்கரின் விஜயத்தில் முக்கிய அம்சமாகும். 

NO COMMENTS

Exit mobile version