Home இலங்கை அரசியல் நுவரெலியாவில் 80 சதவீதமான வாக்குப் பதிவு : வெளியான அறிவிப்பு

நுவரெலியாவில் 80 சதவீதமான வாக்குப் பதிவு : வெளியான அறிவிப்பு

0

புதிய இணைப்பு 

இன்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில், மாலை 04.00 மணி வரை வாக்களிப்பு சுமூகமாக இடம் பெற்றதாகவும் 80% சதவீதமான
வாக்குகள் அளிக்கப்பட்டதாகவும், நுவரெலியா மாவட்ட செயலாளரும், தேர்தல்
தெரிவத்தாட்சி அதிகாரியுமான நந்தன கலபட தெரிவித்துள்ளார்.

இன்று மாலை நடைப்பெற்ற ஊடகவியலாளர்களின் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ”தேர்தல் வாக்களிப்புகள் எவ்விதமான அசம்பாவிதங்களுமின்றி மிகவும் அமைதியான
முறையில் நடைப்பெற்றதாக சுட்டிக்காட்டினார்.

காவல்துறையினர் தமது கடமைகளை உரிய
முறையில் மேற் கொண்டார்கள் எனவும், அதிகாரிகள் தமது கடமைகளை சிறப்பான முறையில்
முடிவுக்கு கொண்டு வந்தார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

காவல்துறையினர் கடமையில் இருந்தனர்

காலை 07.00 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமாகிய போதிலும் காலை
வேளையில் பல பகுதிகளில் வாக்களிப்பு மந்த கதியில் இடம்பெற்றது. ஆனாலும்,
பிறகு பெருந்தோட்டப்பகுதி மற்றும் நகர் புறங்களில் வாக்களிப்பு மிகவும்
சுறுசுறுப்பாக இடம்பெற்றது.

நுவரெலியா மாவட்டத்தில் காலை 09 மணி வரை 30 வீதம் வாக்குகளே பதிவாகி இருந்தது.
12 மணியளவில் அது 45 வீதமாகவும், 01 மணியளவில் 72 வீதமாகவும் வாக்களிப்புகள்
இடம்பெற்றன.

பகல் 01 மணிக்கு பின் வாக்களிப்பு சுறுசுறுக்காக இடம்பெற்றது.
பெருந்தோட்ட தொழிலாளர்கள் அதிகளவானவர்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பதை
காணக்கூடியதாக இருந்தது.

நுவரெலியா மாவட்டத்திற்கு சர்வதேச கண்காணிப்பு குழு உறுப்பினர்களும் விஜயம்
செய்துள்ளனர். பொதுவாகவே இந்த தேர்தல் மிகவும் அமைதியாக இடம் பெறுவதாக
மக்களும் கருத்து தெரிவித்தனர்.

தேர்தல் வாக்களிப்பு நடைபெற்ற பொழுது அசம்பாவிதங்கள் எதுவுமின்றி அமைதியாக
வாக்களிப்பு நடைப்பெற்றது. பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கடந்த வருடங்களை விட
இந்த வருடம் மிகவும் ஆர்வத்துடன் வாக்களிப்பில் ஈடுப்பட்டனர்.” என தெரிவித்தார்.

முதலாம் இணைப்பு 

நுவரெலியா (Nuwara Eliya) மாவட்டத்தில் இதுவரை 10% சத வீத வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி/ மாவட்ட செயலாளர் நந்தன கலபட தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (21) காலை மணிக்கு ஆரம்பமாகி தற்போது இடம்பெற்று வருகின்றது.

வாக்குப் பதிவு

மலையகத்தை பொறுத்தவரை பெருந்தோட்ட மக்கள் உட்பட அனைவரும் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று தங்களுடைய வாக்குகளை பதிவு செய்வதை காணக்கூடியதாக இருக்கின்றது.

அதேவேளை, பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுப்பட்டுள்ளதுடன், உள்நாட்டு வெளிநாட்டு சர்வதேச கண்காணிப்பாளர்களும் தங்களது பார்வையை செலுத்தி வருகின்றனர்.

இதனடிப்படையில், காலை எட்டு மணி வரையான காலப்பகுதியில் நுவரெலியா மாவட்டத்தில் 10% சத வீத வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வாக்களிக்க தகுதி பெற்றுள்ளோர்

இதேவேளை மலையக பெருந்தோட்ட மக்கள் அனைவரும் வாக்களிப்பு
நிலையங்களுக்கு சென்று தங்களுடைய வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

நுவரெலியா மாவட்டத்தில் 6 இலட்சத்து 5,292 பேர் வாக்களிக்க தகுதி
பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் 347,646 வாக்காளர்களும்,  கொத்மலை தேர்தல் தொகுதியில் 88219 வாக்காளர்களும், வலப்பனை தேர்தல் தொகுதியில் 90,990 வாக்காளர்களும், ஹங்குராங்கெத்த தேர்தல் தொகுதியில்
78,437 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

நீதியாக இடம்பெறும் வாக்களிப்பு

நுவரெலியா மாவட்டத்தில் 534 வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள்
வாக்களிக்கவுள்ளனர்.

மேலும், 52 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்களிப்பு நிலையங்களில் 8500 பேர் கடமையில் ஈடுபட்டுள்ளதோடு,
பாதுகாப்புக்காக பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் 1748 பேர் கடமையில்
ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல் மத்திய மாகாணத்தில் கண்டி, மாத்தளை போன்ற பகுதிகளிலும் ஊவா
மாகாணத்தில் பதுளை, பண்டாரவளை ஆகிய பகுதிகளிலும் வாக்களிப்பு மிகவும்
நீதியாகவும் சுதந்திரமான முறையிலும் நடைபெற்று வருவதாக தேர்தல் கண்காணிப்பு
அமைப்புகள் தெரிவிக்கின்றன.

Source: https://ibctamil.com/article/jeevan-thondaman-voted-for-the-president-election-1726891159

NO COMMENTS

Exit mobile version