Home இலங்கை குற்றம் நல்லூர் ஆலய சூழல் துப்பாக்கி சூடு நடாத்தி விளையாடும் திடல் இல்லை – நீதிபதி இளஞ்செழியன்...

நல்லூர் ஆலய சூழல் துப்பாக்கி சூடு நடாத்தி விளையாடும் திடல் இல்லை – நீதிபதி இளஞ்செழியன் விசனம்

0

நல்லூர் ஆலய சூழல் துப்பாக்கி சூடு நடாத்தி
விளையாடும் திடல் இல்லை என நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

நல்லூர் சந்தியில் நீதிபதி இளஞ்செழியன் மற்றும் பொலிஸ் மெய்ப்பாதுகாவலர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோக வழக்கு தொடர்பில் சாட்சியம் அளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த வழக்கு விசாரணை இன்று (25.4.2024) யாழ். நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள மேல் நீதிமன்றத்தில் நீதிபதி டி.எஸ்.சூசைதாஸன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

சிவில் உடை தரித்த நபர்

வழக்கு குறித்து நீதிபதி இளஞ்செழியன் மேலும் கூறுகையில்,

“சம்பவ தினத்தன்று (22.07.2017) மேல் நீதிமன்றில் இருந்து எனது காரில் யாழ். – கண்டி வீதி வழியாக சென்று , கோவில் வீதி வழியாக எனது உத்தியோகபூர்வ இல்லத்தை நோக்கி பயணித்தேன்.   

காரினை எனது சாரதி ஓட்டினார். அவருக்கு அருகில் எனது ஒரு மெய்ப்பாதுகாவலர் அமர்ந்திருந்தார். நான் காரின் பின் இருக்கையில் அமர்ந்து இருந்தேன்.

எனது கார் சாரதியின் மோட்டார் சைக்கிளை எனது மற்றுமொரு மெய்ப்பாதுகாவலர் செலுத்தி வந்தார்.   

நல்லூர் ஆலய பின் வீதியில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டமையால் , மோட்டார் சைக்கிளில் முன்னே சென்ற எனது மெய்ப்பாதுகாவலர் வீதியின் போக்குவரத்தினை சீர் செய்து எனது காரினை சந்தியால் பருத்தித்துறை வீதி பக்கம் அனுப்பினார்.

அவ்வேளை காரின் பின் புறமாக இருந்த நான் காரின் கண்ணாடி வழியாக பின் புறம் அவதானித்த போது , சிவில் உடை தரித்த நபர் ஒருவர் வீதியில் போக்குவரத்தினை சீர் செய்து கொண்டிருந்த எனது மெய்ப்பாதுகாவலரின் இடுப்பு பட்டியில் இருந்த துப்பாக்கியை பறிக்க முற்பட்டார்.

    

அதனை அவதானித்து காரினை நிறுத்துமாறு சத்தமிட்டேன். மெய்ப்பாதுகாவலர், சிவில் உடை தரித்தவரிடம் இருந்து தனது துப்பாக்கியை பறிக்க மல்லுக்கட்டினார்.

நான் காரினை விட்டு இறங்கி துப்பாக்கியை கீழே போடுமாறு கத்தினேன். எனக்கும் அவர்களுக்கும் இடையில் 12 – 15 அடி இடைவெளி இருந்தது.

பலத்த பாதுகாப்பு

துப்பாக்கியை பறித்தவர் துப்பாக்கியை லோர்ட் செய்தார். சிறிது நேரத்தில் “மகே அம்மே” என கத்தியவாறு எனது மெய்ப்பாதுகாவலர் வயிற்றை பிடித்தவாறு சரிந்து விழுந்தார்.
  

அடுத்து துப்பாக்கியுடன் நின்றவர் என்னை நோக்கி சுட்டார். உடனே என்னுடன் காரில் பயணித்த மற்றைய மெய்ப்பாதுகாவலர், என்னை காரின் இடது புறம் தள்ளி விட்டு கீழே படுத்துக்கொண்டார்.

அவ்வேளை அவரது இடது தோள் புறத்தில் துப்பாக்கி சூடு பட்டது. பதிலுக்கு எனது மெய்ப்பாதுகாவலர் துப்பாக்கி சூடு நடத்தினார்.  

இருவரது துப்பாக்கி ரவைகளை தீர்ந்த நிலையில் , சிவில் உடை தரித்தவர் எனது காரின் எதிர்புறமாக பருத்தித்துறை வீதி வழியாக ஓடி தப்பினார்.

துப்பாக்கி சூடு நடத்தியவரை சுமார் 12 நிமிடங்கள் நேரில் பார்த்தேன் என்பதால், எதிரி கூண்டில் நிற்கும் எதிரி தான் துப்பாக்கி சூட்டினை நடாத்தினார் என நன்கு தெரியும்” என கூறினார்.   

குறுக்கு விசாரணையின் போது, எதிரியின் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி , “முச்சக்கர வண்டி, சாரதிக்கு இடையிலான முரண்பாட்டின் போது, உங்கள் மெய்ப்பாதுகாவலர் தலையீடு செய்தமையால், ஏற்பட்ட முரணாலேயே துப்பாக்கி சூடு இடம்பெற்றது. உங்களை கொல்லவேண்டும் என்ற நோக்கம் இருக்கவில்லை” என குறிப்பிட்டதை , நீதிபதி மறுதலித்து “நல்லூர் ஆலய சூழல் சுட்டு விளையாடும் திடல் அல்ல” என தெரிவித்தார்.   

மேலும், தனது சாட்சியத்தின் பின்னர் நீதிபதி அரச சட்டவாதி மற்றும் எதிர்தரப்பு சட்டவாதி ஆகியோருக்கும் நீதிபதி இளஞ்செழியன் தனது நன்றிகளை தெரிவித்து விட்டு வெளியேறினார். 

நீதிபதியின் சாட்சியம் நிறைவுற்றதை அடுத்து அவர் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறினார்.

குறித்த வழக்கு விசாரணைகள் நாளைய தினம் வெள்ளிக்கிழமை வரை தொடர்ச்சியாக மூன்று தினங்கள் யாழ்.மேல் நீதிமன்றில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Source: https://tamilwin.com/article/judge-ilancheliyan-nallur-gun-shooting-case-1714042669

NO COMMENTS

Exit mobile version