Home இலங்கை சமூகம் யாழில் மருந்தகத்துக்கு சட்டவிரோதமாக அனுமதி: வைத்தியர் கேதீஸ்வரன் மீது குற்றச்சாட்டு

யாழில் மருந்தகத்துக்கு சட்டவிரோதமாக அனுமதி: வைத்தியர் கேதீஸ்வரன் மீது குற்றச்சாட்டு

0

வடக்கு மாகாண சுகாதார சேவைகள்
பணிப்பாளராக வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் இருந்த காலப்பகுதியில் யாழில் உள்ள மருந்தகம் ஒன்றுக்கு சட்டவிரோதமாக அனுமதி
வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட நபர்
நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட புதிய சட்டத்தின் பிரகாரம், வைத்தியசாலைக்கு அருகே
இல்லாத மருந்தகம் ஒன்றுக்கு அனுமதி வழங்குவதாயின் இரண்டு மருந்தகங்களுக்கு
இடையே 250 மீற்றர்கள் இடைவெளி இருக்க வேண்டும் என்ற நியதி காணப்படுகிறது.

இடைப்பட்ட தூரம்

ஆனால், பலாலி வீதி, கந்தர்மடம், யாழ்ப்பாணம் என்ற முகவரியில் ஏற்கனவே இரண்டு
மருந்தகங்கள் உள்ள நிலையில் 2021ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட காலப்பகுதியில் புதிய
மருந்தகம் ஒன்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, புதிதாக அமைக்கப்பட்ட மருந்தகத்துக்கான பாதை வழியை சுற்றுப் பாதையால்
அடையாளப்படுத்தி ஒரு மருந்தகத்தில் இருந்து 302 மீற்றர்கள்
தூரம் என்றும் மற்றைய மருந்தகத்தில் இருந்து 306 மீற்றர்கள் தூரம் என்றும்
அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

(வழமையாக கூகுள் மெப் (Google Map) மூலமே அளவிடும் முறை உள்ளது, ஆனால் நடைப்பயிற்சி மூலம் உடல் நிறை குறைக்கும் செயலி மூலம் அளவிட்டு தூரத்தை அதிகரித்து அனுமதி வழங்கப்பட்டது)

ஆனால், மூன்று மருந்தகத்துக்கும் பிரதான பாதையாக
பலாலி வீதி காணப்படுகிறது.

தகவல் அறியும் உரிமை சட்டம்

பாதிக்கப்பட்ட மருந்தக உரிமையாளர், இரு மருந்தகங்களுக்கு இடையே எந்த வகையில்
அளவீடு செய்தீர்கள் என தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அந்த காலப்பகுதியில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரை வினவியவேளை, அதனை அளவிடுவதற்கு
முறைமை ஒன்று இல்லை என பதில் வழங்கியுள்ளார்.

இதே கேள்வியை தகவல் அறியும்
உரிமை சட்டம் மூலம் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிடம்
வினவிய போது 250 மீற்றர்கள் இடைவெளி தேவை என்றும், கூகுள் மெப் (Google Map) மூலம்
அளவிடப்படும் என்றும் எழுத்துமூல பதில் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள மருந்தகங்களுக்கு இடையே உரிய தூர இடைவெளி இல்லாத
நிலையில், அதனை பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பிக்கும் யாழ்ப்பாண பிராந்திய
சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் உணவு மருந்து பரிசோதகர் என்.கஜேந்திரன், அனுமதி வழங்க முடியாது என அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

எழுத்துமூல முறைப்பாடு 

ஆனால், எஸ்.தயாபரன் என்ற யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்
பணிமனையின் உணவு மருந்து பரிசோதகர், 300, பழம் வீதி கந்தர்மடம் என்ற மாற்று
பாதை மூலம் அடையாளப்படுத்தி அனுமதி வழங்கியுள்ளார்.

இருப்பினும், 300, பழம் வீதி
கந்தர்மடம் என்று ஒரு பதிவில் வீதி இல்லை என தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம்
தெரிய வந்துள்ளது.

குறித்த மருந்தகம் அமைந்துள்ள பகுதிக்கு பொறுப்பான உணவு மருந்து பரிசோதகராக
என். கஜேந்திரனே கடமையாற்றுகின்றார்.

இந்நிலையில், தயாபரன், அந்த
பகுதிக்கு பொறுப்பானவர் இல்லை. இவர்களுக்கான கடமை இடங்களை அந்த காலப்பகுதியில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக இருந்த வைத்திய கலாநிதி
ஆ. கேதீஸ்வரனே பிரித்து கையொப்பமிட்டுள்ளார்.

இந்த பிரச்சினைகள் அனைத்தும் தொடர்பாக குறித்த காலப்பகுதியில் வடக்கு மாகாண
சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமை புரிந்த வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வனுக்கு எழுத்துமூலமான முறைபாடாக வழங்கியும் அவர் எந்தவிதமான
நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறிருக்கையில், நேற்று முன்தினம், சாவகச்சேரி வைத்தியசாலை நிர்வாகப்பிரிவு வைத்தியர் அர்ச்சுணா, பல வைத்தியர்களது முறைகேடுகள் குறித்து
அம்பலப்படுத்தும் போது, வைத்திய கலாநிதியினுடைய ஊழல்களையும்
வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version