Home இலங்கை சமூகம் இரு நாட்களுக்கு மூடப்படும் கொடுக்குளாய் – இயக்கச்சி அபாயவெளி பாதை

இரு நாட்களுக்கு மூடப்படும் கொடுக்குளாய் – இயக்கச்சி அபாயவெளி பாதை

0

வடமராட்சி – கிழக்கு கொடுக்குளாய் – இயக்கச்சி அபாய வெளியேற்றப் பாதை இரண்டு
நாட்களுக்கு மூடப்படுவதால் மாற்று வழியை பயன்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர் உறவுகள் மற்றும் அரசியல்வாதிகள், அயல் கிராம மக்களின் உதவியுடன் 78
இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட கொடுக்குளாய் – இயக்கச்சி அபாயவெளி பாதை
தற்பொழுது பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது. 

கையிருப்பில் உள்ள சிறு நிதியை கொண்டு பள்ளங்களை கிரவல் மூலம் மூடுவதற்கு
தீர்மானித்து இரண்டு நாட்களுக்கு குறித்த அபாயவெளி பாதை முற்றுமுழுதாக
மூடப்படுகின்றது.

இது குறித்து ஊடகங்களுக்கு இன்று (28.10.2024) கருத்து தெரிவித்த உடுத்துறை
கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவரும், கொடுக்குளாய் சக்திவேல்
விளையாட்டு கழக தலைவருமாகிய கணேஸ்வரன் (கிட்டு)

இந்த அபாயவெளி பாதை சில நாட்களுக்கு முன்பு திருத்தம் செய்யும் பணியில்
ஈடுபட்ட போது பெய்த கடும் மழையால் தற்காலிகமாக நிறுத்தியுள்ளோம்.

திருத்தம் செய்யும் பணி

இந்த வேலையை
மேற்கொண்டு தொடர்வதற்காக நாளையும் (29) நாளை மறுதினமும் (30) இரு தினங்கள்
அபாயவெளி பாதையை மூடி திருத்தம் செய்யும் பணியில் ஈடுபடவுள்ளோம்.

இந்த அபாயவெளி பாதையால் நாளாந்தம் இரண்டாயிரம் மக்களுக்கு மேல்
பயணித்து வருவதால் இதை முற்றுமுழுதாக மூடுவதால் மக்கள் சிரமங்களை
எதிர்நோக்குவார்கள். இதை மூடி திருத்தம் மேற்கொள்ளாவிடில் அபாய நேரத்தில்
வெளியேற முடியாமல் பலர் உயிரிழக்க நேரிடும் என்பதால் இரண்டு நாட்களுக்கு
பாதையை மூடவுள்ளோம்.

இந்த அபாயவெளி பாதை இருந்திருந்தால் வடமராட்சி கிழக்கில் சுனாமி
அனர்த்தத்தின் போது உயிரிழந்த பலரின் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும். இதனை
கருத்தில் கொண்டு மேலும் இப்படியொரு சம்பவம் இடம்பெறக்கூடாது என்பதற்காக 78
இலட்சம் ரூபா செலவில் மக்கள் நாம் உருவாக்கினோம்.

வர்த்தக போக்குவரத்து, அரச ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள், மருத்துவ நோயாளிகள் என
பலர் இந்த பாதையால் பயணிப்பதை அரசாங்கமும், அரசியல்வாதிகளும் அறிந்தும் கண்டு
கொள்ளாமல் இருக்கின்றார்கள். 

ஒரு சில அரசியல்வாதிகள் ஆரம்பத்தில் சிறு உதவிகள் செய்த போதும் மேற்கொண்டு
இந்த பாதையை புனர்நிர்மானம் செய்ய வேண்டிய தேவை இருப்பதால் ஒரு முறையாவது எமது
பிரதேசத்திற்கு வந்து இந்த அவல நிலையை பார்வையிட வேண்டும்

மழைக்காலம் என்பதால் அவசரமாக இந்த வீதியை கிரவல் கொண்டு செப்பனிட இருப்பதால்
முடிந்தவர்கள் உதவி புரிந்து வடமராட்சி கிழக்கு மக்களின் உயிர் கேடயமாக
காணப்படும் கொடுக்குளாய் – இயக்கச்சி பாதையை புனரமைப்பு செய்து தருமாறும்
கேட்டுக் கொண்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version