கொத்மலை அணைக்கட்டுக்கு மேல் பகுதியில் அமைந்துள்ள மலைத் தொடரில் பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் லால் காந்த தெரிவித்துள்ளார்.
கொத்மலை அணைக்கட்டில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக பரப்பப்பட்டு வரும் செய்திகள் தொடர்பில் ஆராய்வதற்காக கொத்மலை அணைக்கட்டுக்கு சென்ற அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
அணைக்கட்டுக்கு பாதிப்பில்லை
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
கொத்மலை அணைக்கட்டுக்கு மேல் அமைக்கப்பட்டுள்ள கொங்ரீட் பாதையிலும் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளது. மலைத் தொடரில் இதற்கு முன்னர் வெடிப்புகள் இருக்கவில்லை. இது தொடர்பில் கட்டிடங்கள் ஆராச்சி திணைக்களம் (NBRO)ஆய்வுகளை மேற் கொள்ளவுள்ளது.
கொத்மலை அணைக்கட்டுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அணைக்கட்டு எந்நேரத்திலும் உடைபெடுக்கலாம் என கம்பளை மற்றும் கண்டியில் வாழும் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
கொத்மலை அணைக்கட்டுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. இது தொடர்பிலான உண்மையான தகவல்களை மறைப்பதாக பரப்பப்படும் பொய்க் குற்றச்சாட்டுகளை நம்ப வேண்டாம்.
சாதாரண வானிலையால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. ஆனால் மீண்டும் ஒரு சூறாவளி ஏற்பட்டால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
