யாழ். வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் லொறி சாரதி ஒருவரின் செயலால்
ஆசிரியர்கள், மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ள சம்பவம்
பதிவாகியுள்ளது.
மருதங்கேணி தெற்கு பகுதியூடாக பாடசாலை செல்லும் மாணவர்கள், ஆசிரியர்களை ஏற்றும் பேருந்தானது இன்று(4) காலை 07.00 மணியளவில் அந்த வழியில் பயணித்தது.
இந்நிலையில், மருதங்கேணி பகுதியில் புதிதாக அமைக்கப்படும் மாடி வீட்டிற்கு ஓடுகளை
இறக்குவதற்காக லொறி ஒன்று வீதியை மறித்து நிறுத்தப்பட்டது.
தாமதமாக செல்லவேண்டிய நிலை
இதனால் பேருந்து மற்றும் ஏனைய வாகனங்கள் குறித்த பகுதியால் பயணிக்க முடியாத
சூழ்நிலை உருவானது. உடனடியாக லொறியை அப்புறப்படுத்துமாறு சாரதிக்கு கூறிய
போதும் அவர் அதனை அகற்றாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் மாணவர்கள், ஆசிரியர்களை ஏற்ற முடியாமல் பேருந்தானது மாற்று வழியால்
திரும்பிச் சென்றதுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் சிலர் பாடசாலைக்கு தாமதமாக
செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.
தூர பிரதேசத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் சிலர் குறித்த லொறி சாரதியின்
நடவடிக்கையால் பேருந்து இன்றி பாடசாலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
