தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) மற்றும் தமிழ்நாடு விடுதலை இராணுவம் (TNLA) ஆகியவற்றின் சித்தாந்தங்களை சமூக ஊடகங்கள் மூலம் பரப்பியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், இந்தியாவில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த ஒருவர் மீது இந்திய தேசிய புலனாய்வு முகமை (NIA) வழக்குப் பதிவு செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குற்றம் சாட்டப்பட்டவர், தமிழ்நாடு மற்றும் வடக்கு இலங்கையை உள்ளடக்கிய ஒரு இறையாண்மை கொண்ட தமிழ் தேசத்தை உருவாக்க அழைப்பு விடுத்திருந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பயங்கரவாத எதிர்ப்பு
பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் தீவிரமயமாக்கல் எதிர்ப்புப் பிரிவு (CTCR) சட்டங்களின் மூலம் அவர் கைதுசெய்யப்பட்ட நிலையில், இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) வழங்கிய வழிகாட்டுதல்களின் பேரில் தேசிய புலனாய்வு முகமை (NIA) இந்த விசாரணையை மேற்கொள்வதாக கூறப்படுகிறது.
குற்றம் சாட்டப்பட்டவர், விடுதலைப் புலிகள் மற்றும் தமிழ்நாடு விடுதலை இராணுவத்திற்கு ஆதரவான உள்ளடக்கங்களை இன்ஸ்டாகிராம் கணக்குகள் மற்றும் ஒரு முகநூல் பக்கத்தில் பரப்பி வந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.
மேலும், தடைசெய்யப்பட்ட தமிழ்நாடு விடுதலை இராணுவத்திற்குப் புத்துயிர் அளிக்கும் நோக்கில் பிரிவினைவாத சித்தாந்தத்தை அந்தக் கணக்குகள் பரப்பியதாகவும், அந்தப் பதிவுகள் மூலம் ‘தமிழ்நாடு இளைஞர் அமைப்பு’ என்ற புதிய அமைப்பை நிறுவ முயன்றதாகவும் புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.
தமிழக காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்ற முடிவு செய்தது.
இந்த வழக்கு, இளைஞர்களைத் தவறாக வழிநடத்தி, அவர்களைப் பிரிவினைவாதத்தின் பக்கம் மூளைச்சலவை செய்வதுடன், தேசியப் பாதுகாப்பிற்குப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு பரந்த சதித்திட்டம் தொடர்பானது என்று மத்திய அரசு குறிப்பிட்ட்டுள்ளது.
Source: https://ibctamil.com/article/ltt-support-nia-arrests-tamil-nadu-youth-1787927150
