இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் உள்ள நல்கொண்டா மாவட்டத்தில், நாகார்ஜுனா பொதுப் பள்ளியின் அதிபரை படுகொலை செய்த அதே பள்ளியை சேர்ந்த இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹைதராபாத்தில் இருந்த அவரது கணவர், ரூபா ரெட்டியைத் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாமல் போனதை தொடர்ந்து அவரது வீட்டில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தெரியவருகிறது.
இக்கொலை வழக்கு குறித்து விசாரிக்கக் காவல்துறை ஐந்து தனிப்படைகளை அமைத்து, சிசிடிவி காட்சிகள், தடயவியல் சான்றுகள் மற்றும் கைரேகைகளை ஆய்வு செய்து 80-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
சந்தேகத்துக்குரிய மாணவர்கள்
அதில், உயிரிழந்த ரெட்டி இறுதியாக தனது அத்தையுடன் பேசிய தொலைபேசி உரையாடலில் ‘பாபு’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியது தெரியவந்தள்ளது.
இதனைத் தொடர்ந்து பள்ளிக்கு வராத ஐந்து 10 ஆம் வகுப்பு மாணவர்களைக் காவல்துறை தீவிரமாகப் பின்தொடர்ந்த நிலையில், அதில் இருவர் சமீபகாலமாக அதிக அளவில் பணம் செலவழித்து விருந்துகளை நடத்தி வந்தது தெரியவந்துள்ளது.
முன்னதாக பைகளில் பணமும் கைபேசியும் வைத்திருந்ததற்காக கொலை செய்யப்பட்ட ரெட்டியால் தண்டிக்கப்பட்டு, விடுதியிலிருந்து நீக்கப்பட்டு நாள்தோறும் பள்ளிக்கு வரும் மாணவர்களாக மாற்றப்பட்ட கோபத்தில் அவர்கள் இச்சம்பவத்தைத் திட்டமிட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொலை சம்பவம்
கத்தி மற்றும் கையுறைகளுடன் ரெட்டியின் வீட்டிற்குள் புகுந்த ஒரு மாணவன், அங்கிருந்த ரூ. 2,50,000 ரொக்கப் பணத்தைக் கைப்பற்றியுள்ளான்.
அப்போது அவனது முகக்கவசம் விலகியதால் ரெட்டி அவனை அடையாளம் கண்டுகொண்டார்.
இதனால் அவர் குறித்த மாணவனாலேயே 27 முறை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இரத்தக்கறை படிந்த உடைகளை மறைத்துவிட்டு கோவாவுக்குத் தப்பிச் சென்ற அந்த மாணவர்களிடமிருந்து ரூ. 1,54,000 ரொக்கம், ஒரு ஐபோன் மற்றும் படுகொலை செய்யப்பட்ட ரெட்டியின் தொலைபேசியைக் காவல்துறை பறிமுதல் செய்துள்ளது.
குற்றத்தைச் செய்வதற்கு முன், குறைந்த காலத்தில் விரைவாகப் பணம் சம்பாதிப்பது எப்படி என்று அவர்கள் இணையத்தில் தேடியிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Source: https://ibctamil.com/article/two-students-killed-principal-in-telangana-1787230543
