மட்டக்களப்பு(batticaloa) சந்திவெளி காவல்துறை பிரிவிலுள்ள ஜீவபுரம் தொடருந்து தண்டவாளத்தில்
தலையைவைத்து நித்திரையில் இருந்த ஆண் ஒருவரை கொழும்பில் இருந்து மட்டக்களப்பு
நோக்கி சென்ற கடுகதி தொடருந்து மோதியதில் தலை துண்டிக்கப்பட்டு உயிரிழந்த
சம்பவம் நேற்று சனிக்கிழமை (06) இரவு 10.00 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக
சந்திவெளி காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்திவெளி ஜீவநகரைச் சேர்ந்த 28 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான வரதராஜா
கிருஷ்ணகாந்தன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மது போதையில் தண்டவாளத்தில் தலையை வைத்து நித்திரை
குறித்த நபர் சம்பவதினமான நேற்று இரவு 10.00 மணிக்கு மது போதையில்
தண்டவாளத்தில் தலையை வைத்து நித்திரையில் இருந்துள்ள நிலையல் கடுகதி தொடருந்து
மோதியதில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார் .
இதனையடுத்து சடலத்தை மீட்டு ஏறாவூர் தொடருந்து நிலையத்தில் ஓப்படைத்துவிட்டு
தொடருந்து சாரதி பயணத்தை மேற்கொண்டுள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணையில்
தெரியவந்துள்ளது.
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட சடலம்
இதனையடுத்து சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை
ஆதார வைத்தியசாலையில்
ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை சந்திவெளி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
