Home இலங்கை அரசியல் நாட்டை நேசிக்காதவர்கள் நற்செய்திக்கு அச்சமடைகிறார்கள்: மனுஷ நாணயக்கார

நாட்டை நேசிக்காதவர்கள் நற்செய்திக்கு அச்சமடைகிறார்கள்: மனுஷ நாணயக்கார

0

Courtesy: Ministry of Labour & foreign Emp

நாட்டு மக்களை நேசிக்காதவர்கள், நாட்டுக்கு வரும் நல்ல செய்திகளை கண்டு அஞ்சுகின்றனர் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார(Manusha Nanayakkara) தெரிவித்துள்ளார்.

அத்துடன்,நாட்டுக்கு நற்செய்தி வருவதை அறிந்து மண்ணெண்ணெய் ஊற்றிய பாம்பைப் போல நாலாபுறமும் ஓட ஆரம்பித்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். 

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மொனராகலை மாவட்ட பிராந்திய அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று(24.06.2024) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

நாட்டின் பொருளாதாரம்

அவர் மேலும் கூறியதாவது,

“வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மிகவும் திறமைவாய்ந்த நிறுவனம். அதன் ஊடாக புலம்பெயர் தொழிலாளர்களின் பணத்தை சட்டரீதியாக நாட்டுக்கு கொண்டு வருவதற்கும் பயனுள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இந்த நாட்டை வெறுப்பவர்கள் ஒரு போதும் நாடு பொருளாதாரத்திலிருந்து மீள விரும்பமாட்டார்கள் இவர்கள் நாட்டு மக்களை நேசிக்காதவர்கள், மக்கள் மருந்து, எரிபொருள் இன்றி வரிசையில் நின்று மரணிக்க வேண்டும் என நினைப்பவர்கள் புலம்பெயர் தொழிலாளர்களிடம் பணம் அனுப்ப வேண்டாம் என்றார். இவர்கள் வேறு யாரும் இல்லை சிவப்பு சகோதரர்கள்.

எனினும், கடந்த இரண்டு வருடங்களில் மாத்திரம் புலம்பெயர் தொழிலாளர்கள் சுமார் 12 பில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்கு அனுப்பியுள்ளனர்.

நாடு மீண்டும் சுவாசிக்கக்கூடிய சூழலை உருவாக்கியவர்கள் இவர்கள், பொருளாதாரத்தில் இருந்து நாடு மீண்டுவருவதை அரசியல் தளத்தில் இருக்கும் சிலர் விரும்புவதில்லை.

நாடு முழுவதும் இன்று நற்செய்தி என்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.சிலர் குழப்பமடைந்து மண்ணெண்ணெய் ஊற்றிய பாம்பு போல ஓடுவதை சமூக வலைத்தளங்களில் பார்த்தேன். 

இவர்கள் நற்செய்திக்கு பயப்படுகிறார்கள். நாட்டு மக்களை நேசிப்பவராக இருந்தால், மக்களை நேசிக்கும் தலைவனாக இருந்தால், நாட்டுக்கு நற் செய்தி வரும்போது அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். நாட்டிற்கு கெட்ட செய்திக்காக காத்திருந்தவர்களுக்கு இனி வரும் காலங்களில் கெட்ட செய்தி வரும்.

பொருளாதார சவால்

இந்த நாட்டை நேசிப்பவர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொருளாதார சவாலை ஏற்றுக்கொண்டார்.

நாட்டு மக்களை நேசிக்காத, பதவியை மட்டுமே நேசிக்கும் தலைவர், பிரதமர் பதவியை பொறுப்பேற்கும் படி கூறிய போதும் அதனை ஏற்கவில்லை.

இன்று நாட்டை சுற்றி வரும் தற்பெருமைத் தவைவரும் அப்படித்தான். பிரதமர் பதவியை ஏற்க மறுத்துவிட்டார் அவர் தன் நிலையைப் பற்றி மட்டுமே சிந்த்தித்தார்.

நாட்டு மக்களால் நேசிக்கப்படும் ரணில் விக்ரமசிங்க அவர்கள் நாட்டு மக்கள் மீது கொண்ட அன்பின் காரணமாகவே பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டார். இன்று நாட்டை சரியான இடத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

எனவே, ஒரு நாடாகவும் தேசமாகவும் நாம் அவருக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version