Home இலங்கை அரசியல் விரைவில் நாமல் கைது : அநுர தரப்பின் அடுத்த அதிரடி நடவடிக்கை

விரைவில் நாமல் கைது : அநுர தரப்பின் அடுத்த அதிரடி நடவடிக்கை

0

எதிர்வரும் நாட்களில் சஜித் பிரேமதாச மற்றும் நாமல் ராஜபக்ச போன்றவர்களும் சட்டத்தின் வரையறைக்குள் கைது செய்யப்படலாம் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பத்திரிகைக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ரணிலுக்கு எதிராக சட்டம் 

மேலும் தெரிவிக்கையில், திட்டமிட்டு எவரும் கைது செய்யப்படுவதில்லை. ஏனெனில் இவர்கள் யாரும் எமக்கு அரசியல் ரீதியில் சவாலானவர்கள் அல்ல. எமக்கு நாம் தான் சவால். நாம் இன்று சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தியுள்ளோம்.

ஒருநாளும் தமக்கு எதிராக சட்டம் செயல்படாது என நினைத்திருந்த ரணில் விக்ரமசிங்க மற்றும் ராஜபக்சக்கள் உள்ளிட்டவர்களுக்கு எதிராக இன்று சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, ரணிலுடன் ஒன்றிணைந்த அனைவருக்கும் நீதிமன்றில் வழக்குகள் உள்ளன.

இவர்கள் ரணில் மீதுள்ள அன்பினால் ஒன்றுசேரவில்லை. மாறாக ரணிலுக்கு எதிராக சட்டம் செயற்பட்டு உள்ளது என்றால் அடுத்தது நாங்கள்தான் என்பதை அவர்கள் அறிவார்கள்.

மேலும், ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்கள் தொடர்பான தீர்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்த தீர்ப்பை இவ்வாரம் சபாநாயகர் நாடாளுமன்றத்தில் அறிவிப்பார். இதன் பிரகாரம் புதிய சட்டம் நிறைவேற்றப்படும்.

எனவே எதிர்வரும் நாட்களில் ராஜபக்சக்கள் மீண்டும் மெதமுலனவுக்கு செல்ல நேரிடும். அனைவருக்கும் சட்டம் சமம் என்ற சட்டத்தின் ஆட்சியே முன்னெடுக்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version