Home இலங்கை சமூகம் நெடுந்தீவு இளைஞன் கொலை விவகாரம்: நீதி கோரி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

நெடுந்தீவு இளைஞன் கொலை விவகாரம்: நீதி கோரி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

0

யாழ். நெடுந்தீவு பகுதியில் கொலை செய்யப்பட்ட இளைஞருக்கு நீதி வேண்டி நெடுந்தீவு
பொலிஸ் நிலையம் முன் மக்களினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவு ஏழாம் வட்டாரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்றைய தினம்(20) அதிகாலை
அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

கவனயீர்ப்பு போராட்டம்

பிரேத பரிசோதனையின் பின் நேற்று(20) இரவு சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட
நிலையில் இன்று(21) இறுதி கிரிகைகள் அவரது இல்லத்தில் நடைபெற்று அதன் பின்னர்
நல்லடக்கத்திற்காக சேமக்காலைக்கு எடுத்துச் செல்லும் போது மக்கள் சடலத்தையும்
தோள்களில் சுமந்தவாறு நெடுந்தீவு பொலிஸ் நிலையம் முன்பாக கவனயீர்ப்பு
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்றைய தினம்(20) நடைபெற்ற இளைஞர் கொலையுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர் ஒருவர்
கைது செய்யப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில்
சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் இந்த கொலையுடன் சம்பந்தப்பட்ட ஏனைய
மூவரையும் விரைவாக கைது செய்யுமாறு கோரி நெடுந்தீவு மக்கள் சடலத்துடன்
சென்று நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, பொலிஸாரின் அசமந்த போக்கை சுட்டிக்காட்டிய மக்கள் பொலிஸாரிடம்
வாய்த்தர்க்கத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

இதனைதொடர்ந்து, கலைந்து சென்ற மக்கள் கொலை செய்யப்பட்ட இளைஞரின் சடலத்தை
சேமக்காலையில் நல்லடக்கம் செய்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version