Home முக்கியச் செய்திகள் வடக்கில் இடியுடன் கொட்டப்போகும் மழை : நா.பிரதீபராஜா வெளியிட்ட தகவல்

வடக்கில் இடியுடன் கொட்டப்போகும் மழை : நா.பிரதீபராஜா வெளியிட்ட தகவல்

0

வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளுக்கு எதிர்வரும் 10 நாட்களுக்கு பிற்பகலில் அல்லது இரவு வேளைகளில் அவ்வப்போது மழை பெய்யும் என யாழ். (Jaffna) பல்கலைக்கழகப் புவியியற்றுறைத் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா குறிப்பிட்டுள்ளார். 

முகப்புத்தகத்தில் பதிவொன்றை வைத்து அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

குறித்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக இன்று முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளுக்கு பிற்பகலில் அல்லது இரவு வேளைகளில் அவ்வப்போது மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. 

இடியுடன் கூடிய மழை

நண்பகல் வரை மிகவும் வெப்பமான வானிலை நிலவும். ஆனால் பிற்பகலுக்கு பின்னர் இடியுடன் கூடிய மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 

நண்பகல் வரையான கடும் வெப்பத்தினால் பொதுமக்கள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இருப்பினும் மாலை நேரத்தில் மழை கிடைப்பதால் வெப்பம் தணியலாம் என எதிர்பார்க்கின்றது.

இதேவேளை, எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதோடு, நாட்டைச் சூழவுள்ள கடற் பிராந்தியங்களில் அவ்வப்போது பலத்த காற்று வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) எதிர்வு கூறியுள்ளது. 

பலத்த காற்று

இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தால் வௌியிடப்படும் அறிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் அத்திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. 

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு சுமார் 30-40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version