தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பங்களின் உலகளாவிய ஒருங்கிணைப்புக்குப்
பொறுப்பான ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனமான சர்வதேச தொலைத்தொடர்பு
ஒன்றியத்தின் (ITU) பதிவுகளில் இலங்கை என்ற பெயரில் எந்த செயற்கைக்கோளும்
பதிவு செய்யப்படவில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
செயற்கைக்கோளை ஏவுவதற்கான ITUவின் நிலையான நடைமுறை மூன்று நிலைகளை
உள்ளடக்கியது.
திட்டமிடப்பட்ட செயற்கைக்கோள் வலையமைப்பின் தொழில்நுட்ப விபரங்களைச்
சமர்ப்பித்தல், குறுக்கீட்டைத் தவிர்க்க பிற உறுப்பு நாடுகளுடன்
ஒருங்கிணைத்தல் மற்றும் பதிவு மற்றும் சர்வதேச அங்கீகாரத்திற்கான இறுதி
அளவுருக்களை அறிவித்தல் என்பனவே அவையாகும்.
பொதுவாக இந்த செயன்முறைகளுக்கு மூன்று முதல் ஏழு ஆண்டுகள் வரை ஆகும்.
புவிசார் சுற்றுப்பாதை
ITUவின் உறுப்பினரான இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையகம், இரண்டு
புவிசார் சுற்றுப்பாதை நிலைகளைக் கொண்டுள்ளது.
இதன்படி- 121.5°E மற்றும் 50°E. இந்த நிலைகள் இலங்கைக்கு
ஒதுக்கப்பட்டிருந்தாலும், ஆப்கானிஸ்தான், கிர்கிஸ்தான், மோல்டோவா, நேபாளம்,
தஜிகிஸ்தான் மற்றும் ருமேனியா போன்ற பிற நாடுகளும் தடையின்றி அவற்றில் செயற்படலாம் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், ITU தரவுகளின்படி, இந்த சுற்றுப்பாதையில் “இலங்கை” என்ற
செயற்கைக்கோள் தற்போது இல்லை.
சுப்ரீம்சாட் ஒன் என்ற செயற்கைக்கோளுக்கு சோதனைகள் நடத்தப்பட்டதாகவும்,
பின்னர் அது சீனாசாட் டூ என மறுபெயரிடப்பட்டதாகவும் அமைச்சர் ஜயதிஸ்ஸ கூறியுள்ளார்.
