வடக்கு மாகாணத்தில் முதலீட்டு வலயங்கள் உருவாக்கப்படவுள்ள நிலையில், முதலீட்டாளர்களை அதில் முதலீடு செய்வதற்கு ஊக்குவிக்குமாறு இலங்கைக்கான
மலேசியத் தூதுவர் பாதில் ஹிசாம் ஆடமிடம் வடக்கு மாகாண ஆளுநர்
நா.வேதநாயகன் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள மலேசியத் தூதுவர், வடக்கு மாகாண ஆளுநர்
தலைமையிலான குழுவினரை சந்தித்து கலந்துரையாடிய போதே ஆளுநர் தரப்பிலிருந்து இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், யாழ்ப்பாணத்துக்கும் மலேசியாவுக்கும் இடையிலான பாரம்பரிய உறவுகள் தொடர்பில்
மலேசியத் தூதுவர் ஆளுநருக்கு இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
முதலீடுகளின் அவசியம்
யாழ்ப்பாணத்தின் தற்போதைய
நிலைமைகளை அவதானிப்பது தமது நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வடக்கு மாகாணத்தின் தேவைப்பாடுகள், முதலீடுகளின் அவசியம் தொடர்பில் ஆளுநர்
சுட்டிக்காட்டியுள்ளார்.
விவசாயம் மற்றும் கடலுணவு தொடர்பான வளங்கள் வடக்கில்
நிறைந்துள்ளன எனவும் அவை பெறுமதிசேர் உற்பத்திப்பொருட்களாக ஏற்றுமதி
செய்வதற்கான வாய்ப்புக்கள் அரிது என்றும் ஆளுநர் தெரியப்படுத்தியுள்ளார்.
எதிர்காலத்தில் அமையவுள்ள முதலீட்டு வலயங்களை நோக்கி மலேசிய முதலீட்டாளர்களை
ஊக்குவிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
