Home இலங்கை குற்றம் நுவரெலியாவில் முன்னாள் மாநகரசபை முதல்வர் வீட்டில் திருட்டு

நுவரெலியாவில் முன்னாள் மாநகரசபை முதல்வர் வீட்டில் திருட்டு

0

நுவரெலியா (Nuwara Eliya) – கஜபாபுர பகுதியில் அமைந்துள்ள நுவரெலியா முன்னாள் மாநகரசபை
முதல்வரின் வீட்டில் நகைகள் உள்ளிட்ட
பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இனம் தெரியாத நபர்கள், நேற்று (28.09.2024) அதிகாலை 2 மணியளவில் வீட்டில் இருந்தவர்கள் உறங்கிக்
கொண்டிருந்த போது வீட்டினுள் புகுந்துள்ளனர்.

இந்நிலையில், வீட்டின் மேல்மாடியில் ஜன்னல்
ஒன்றினை உடைத்து உள்நுழைந்த மர்ம நபர்கள் தனி அறையொன்றில் அலுமாரியில்
பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த சிறிய பெட்டகத்திலிருந்து தங்கப்பொருட்கள்
மற்றும் சில பெறுமதியான பொருட்களை எடுத்து சென்றுள்ளமை முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சிசிரிவி காணொளி 

மேலும், அலுமாரிகள் உடைக்கும் சத்தம் கேட்டு வீட்டின் உரிமையாளர்கள்
மேல்மாடியில் வந்து பார்த்த போது ஜன்னல் திறக்கப்பட்டிருந்ததுடன் அங்கிருந்து இருவர் தப்பி ஓடுவதையும் அவதானித்துள்ளதுடன் அருகில் உள்ளவர்களின் உதவியை
நாடியுள்ளனர்.

அதேவேளை, குறித்த நபர்கள் முச்சக்கர வண்டி ஒன்றில் தப்பி செல்லும்
காட்சிகள் வீட்டுக்கு அருகில் வீதியோரமாக பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி
காணொளியில் பதிவாகியுள்ளது.

இதனை அடிப்படையாக கொண்டு பொலிஸார் விசாரணைகளை
ஆரம்பித்துள்ளதுடன் கொள்ளை சம்பவம் தொடர்பிலும் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் வீட்டார்
முறைப்பாடு செய்துள்ளனர். 

இதற்கமைய, தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் கைரேகை
நிபுணர்கள், மோப்ப நாயுடன் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

NO COMMENTS

Exit mobile version