Home இலங்கை அரசியல் வாக்குகளுக்காக பெருந்தோட்ட நிறுவனங்களின் நிபந்தனைக்கு கட்டுப்பட இயலாது: தமிழ் எம்.பி திட்டவட்டம்

வாக்குகளுக்காக பெருந்தோட்ட நிறுவனங்களின் நிபந்தனைக்கு கட்டுப்பட இயலாது: தமிழ் எம்.பி திட்டவட்டம்

0

தேர்தலில் வாக்குவேட்டை நடத்துவதற்காக பெருந்தோட்ட நிறுவனங்களின் நிபந்தனைகளை ஏற்று ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு நாம் தயாரில்லை என்று இ.தொ.காவின் தவிசாளரும், நுவரெலியா (Nuwara Eliya) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து நேற்று (04.09.2024) பொகவந்தலாவை (Bogawantalawa) பகுதியில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், 

“கல்வி புரட்சிமூலமே மலையகத்தில் நிலையானதொரு மாற்றத்தை ஏற்படுத்தலாம் என நாம்
உறுதியாக நம்புகின்றோம். அதனால்தான் கல்வி அபிவிருத்திக்கு முக்கியத்துவமும்,
முன்னுரிமையும் வழங்கி வருகின்றோம். எமது அமைச்சர் ஜீவன் தொண்டமானும் அதிகளவான
நிதி ஒதுக்கீடுகளை கல்விக்காக செய்து வருவதால் தான் இன்று எல்லா
துறைகளிலும் எமது சமூகத்தினர் பிரகாசித்து வருகின்றனர். 

வாக்குவேட்டை 

பெருந்தோட்டப் பகுதிகளுக்கு சமுர்த்தி வழங்கப்படவில்லை. ஆனால் அஸ்வெசும
வந்தபோது எமது மக்களும் உள்வாங்கப்பட வேண்டும் என எமது அமைச்சர் திட்டவட்டமாக
எடுத்துரைத்தார்.

இதனையடுத்து எமது மக்களும் உள்வாங்கப்பட்டனர். அதுமட்டுமல்ல
காணி உரிமை வழங்குவதற்குரிய ஏற்பாடுகளும் இடம்பெறுகின்றன.

தோட்டங்களை
கிராமங்களாக்குவதற்குரிய அமைச்சரவைப் பத்திரமும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எமது மலையகத்துக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பல அபிவிருத்தி திட்டங்களை
முன்னெடுத்துள்ளார். வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகின்றார்.

எனவேதான்
மக்கள் பக்கம் நின்று நாம் அவரை ஆதரிக்கின்றோம். அதுமட்டுமல்ல நடைமுறைக்கு
சாத்தியமான விடயங்களையே அவர் உறுதிமொழியாக வழங்கி வருகின்றார். ஆனால் சில
வேட்பாளர்கள் வாக்குகளைப் பெறுவதற்காக முடியாதவிடயங்களை எல்லாம் கூறுகின்றனர்.

ஏனெனில், தேர்தலின் பின்னர் அவர்கள் காணாமல் போய்விடுவார்கள்.

தேர்தலில் வாக்குவேட்டை நடத்துவதற்காக பெருந்தோட்ட நிறுவனங்களின் நிபந்தனைகளை
ஏற்று ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு நாம் தயாரில்லை. தொழிலாளர்களின் நலனே
எமக்கு முக்கியம்.

எனவே, ஆயிரத்து 700 ரூபாவை நிச்சயம் பெற்றுக்கொடுப்போம். ஆயிரத்து 700 ரூபாவுக்கு என்னாச்சி என சிலர் கேட்கின்றனர். ஆனால்
நல்லாட்சியின் போது அத்தரப்பினரால் 50 ரூபாவை பெற்றுக்கொடுக்க முடிந்ததா?
இல்லை. நாம் வந்த பிறகுதான் ஆயிரம் ரூபா கிடைக்கப்பெற்றது.

 மேலதிக கொடுப்பனவு 

தற்போது அடிப்படை
நாள் சம்பளமாக ஆயிரத்து 350 ரூபா கிடைக்கப்பெற்றுள்ளது. மேலதிக கொடுப்பனவாக
350 ரூபாவை பெறுவதற்குரிய பேச்சுவார்த்தை இடம்பெறுகின்றது.

இது தேர்தல் காலம் என்பதால், வாக்குகளைப் பெறுவதற்காக பெருந்தோட்ட நிறுவனங்களின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட முடியாது.

அவ்வாறு செய்தால் அது தொழிலாளர்களுக்கே
பாதிப்பாக அமையும். தேர்தலுக்காக எமது மக்களை பணயம் வைப்பதற்கு நாம்
தயாரில்லை. வழங்கிய வாக்குறுதி போல நிச்சயம் ஆயிரத்து 700 ரூபாவை
பெற்றுக்கொடுப்போம். சிலருக்கு அரசியல் நடத்துவதற்கு வேறெதுவும் இல்லை.

அதனால் தான் ஆயிரத்து 700 ரூபாவை வைத்து அரசியல் நடத்துகின்றனர்.

அதேவேளை, தோட்டத் தொழிலாளர்கள் சிறுதோட்ட உரிமையாளராக்கப்படுவார்கள் என ஒருவர்
உறுதியளித்தார். அதே அணியில் உள்ள ஒருவர் அது அப்பட்டமான பொய் எனக்
கூறுகின்றார்.

இவர்களின் வாக்குறுதிகளின் இப்படிதான் அமையப்போகின்றது.

எனவே, மீண்டும் வரிசை யுகம் ஏற்படாமல் இருப்பதற்காகவும், எமது மக்களின் வாழ்வு
மேம்படுவதற்காகவும் செப்டெமப்ர் 21ஆம் திகதி ஜனாதிபதி ரணில்
விக்ரமசிங்கவுக்கு வாக்களிப்போம்” என தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version