சர்ச்சைக்குரிய ஒன்டன்செட்ரான் (Ondansetron) ஊசி மருந்துகள் இலங்கைக்கு
இறக்குமதி செய்யப்படுவதற்கு முன்னர் முறையான ஆய்வகப் பரிசோதனைகளுக்கு
உட்படுத்தப்பட்டு, தர உறுதிப்படுத்தல் வழங்கப்பட்ட பின்னரே கொண்டுவரப்பட்டதாக
மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்திய தொழிற்சங்கக் கூட்டமைப்பின்
தலைவர் மருத்துவர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 2024 நவம்பர் முதல் 2025 ஓகஸ்ட் வரையான காலப்பகுதியில் உற்பத்தி
செய்யப்பட்ட இந்த மருந்துகளின் நான்கு தொகுதிகள் இலங்கைக்கு இறக்குமதி
செய்யப்பட்ட போது பக்டீரியா நச்சுத்தன்மை அற்றவை என ஆய்வக அறிக்கைகள்
உறுதிப்படுத்தியிருந்தன.
பெரும் பாதிப்பு
ஒவ்வொரு முறையும் தலா 67,600 குப்பிகள் வீதம் பத்து வெவ்வேறு தர
அளவுகோல்களின் கீழ் பரிசோதிக்கப்பட்ட பின்னரே தேசிய மருந்துகள்
ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைக்கு (NMRA) வழங்கப்பட்டதாக அவர்
குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இலங்கையில் தற்போது பயன்படுத்தப்பட்ட பின்னர் இந்த மருந்துகளில்
பக்டீரியா நச்சு கண்டறியப்பட்டுள்ளமை நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பின்
நம்பகத்தன்மைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.
மேலும், இலங்கையின் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையின் ஆய்வகம்
சர்வதேச அங்கீகாரம் பெறவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், சுமார் 5
பில்லியன் ரூபா செலவில் சர்வதேச தரத்திலான ஆய்வகம் ஒன்றை உடனடியாக நிறுவுவதன்
மூலமே இவ்வாறான தரமற்ற மருந்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளையும் நிதி
இழப்புகளையும் தடுக்க முடியும் என வலியுறுத்தியுள்ளார்.
