Home இலங்கை அரசியல் அனைத்து மாகாணங்களுக்கும் அபிவிருத்திக்கு சமமான வகையில் நிதி ஒதுக்க வேண்டும்! சாமர சம்பத்

அனைத்து மாகாணங்களுக்கும் அபிவிருத்திக்கு சமமான வகையில் நிதி ஒதுக்க வேண்டும்! சாமர சம்பத்

0

வரவு செலவுத் திட்டத்தில், வடக்கு மாகாணத்தை போன்று ஏனைய மாகாணங்களுக்கு பாரிய நிதி ஒதுக்கப்படவில்லை. அனைத்து மாகாணங்களுக்கும் அபிவிருத்திக்கு சமமான வகையில் நிதி ஒதுக்க வேண்டும் என புதிய ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (18) நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் முதல் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பாரிய நிதி

அவர் மேலும் உரையாற்றியதாவது,” வடக்கு மாகாண அபிவிருத்திக்கு 5000 மில்லியன் ரூபாவும், முல்லைத்தீவு பகுதியில் பாலம் நிர்மாணிப்புக்கு 1000 மில்லியன் ரூபாவும் என்ற அடிப்படையில் 6000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஏனைய மாகாணங்களுக்கு பாரிய நிதி ஒதுக்கப்படவில்லை.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஐசிங் பூசிய கேக்கினை முன்வைத்துள்ளார்.

குறிப்பிட்டுள்ள திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் இல்லையேல் பிரச்சினைகள் மாத்திரமே மிகுதியாகும்.

எமது அரசாங்கத்தில் முன்பிள்ளை பாடசாலை ஆசிரியர்களின் சம்பளம் 2000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது. ஆனால் இந்த வரவு செலவுத் திட்டத்தில் 1000 ரூபாய் மாத்திரமே அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கு இது போதுமானதல்ல. இந்த தீர்மானத்தை மீளாய்வு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நலன்புரி கொடுப்பனவுகள்

நலன்புரி கொடுப்பனவுகள் அதிகரித்துள்ளதை வரவேற்கிறேன். பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மாஹாபொல கொடுப்பனவு 2500 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

களனி பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் தான் கடந்த காலங்களில் மக்கள் விடுதலை முன்னணிக்கு சார்பாக செயற்பட்டு கடந்த அரசாங்கங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

களனியில் இருந்து கொழும்புக்கு பேரணியாக வருவார்கள். ஆகவே தற்போது அதிகரித்துள்ள கொடுப்பனவை மேலும் அதிகரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மக்கள் தமது குறைகளை எங்களிடம் குறிப்பிடுகிறார்கள். அந்த குறைகளை நாங்கள் அரசாங்கத்திடம் குறிப்பிடுவோம். அந்த குறைகளுக்கு முறையான தீர்வினை பெற்றுக் கொடுக்காவிடின் கோட்டபய ராஜபக்ச அரசாங்கத்துக்கு ஏற்பட்ட கதியே நேரிடும்.” என கூறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version