எந்த அரசியல் தீர்வும், இந்த இன அழிப்பிலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும் சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநருமான சி.அ. யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அரசியல் தீர்வினை அளப்பதற்கு சரியான அளவு கோல் , கோட்பாட்டு அடிப்படையில் இறைமை, சுயநிர்ணயம் தேசிய இனம் , சுய நிர்ணயத்திற்கான பொறிமுறை என்பன அங்கீகரிக்கப்படுவதோடு அரசியல் யாப்புச் சட்ட ரீதியாக தாயக ஒருமைப்பாடு, சுயநிர்ணய சுயாட்சி அதிகாரம் , கூட்டு அதிகாரத்தில் சமத்துவமான பங்கு , சுயாட்சி அதிகாரங்களுக்கான பாதுகாப்பு என்பவை உறுதிப்படுத்தப்பட்டவையாக இருக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மைத்திரி – ரணில் சம்பந்தன் ஆகியோரின் கூட்டு அரசாங்கமான நல்லாட்சி அரசாங்கத்தின் “ஏக்கியராச்சிய” தீர்வு யோசனை மீண்டும் அரங்கிற்கு வந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமஸ்டி
அவர் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இதனை மீண்டும் அரங்கிற்கு கொண்டு வந்தவர் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் தான்.
சுவிஸ் அரசாங்கத்தினால் சுவிஸ்லாந்தில் ஏற்பாடு
செய்யப்பட்ட சமஸ்டி தொடர்பான செயலமர்வு அரங்கில் தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் அங்கு அதனை பிரஸ்தாபித்திருந்தார்.
இனப்பிரச்சினைக்கு தீர்வாக “ஏக்கியராச்சிய” தீர்வு யோசனையை தாம் புதிய அரசியல் யாப்பில் சேர்க்க இருப்பதாகவும் அதைப்பற்றி முழுமையாகத் தீர்மானித்து விட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.
அச் செயலமர்வு அரங்கில் கலந்து கொண்ட கஜேந்திரகுமார் உடனடியாக அதனை எதிர்த்ததுமல்லாமல் நாடு திரும்பியவுடன் அதனை எதிர்த்துப் பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளார்.
பல்வேறு சிறிய சிறிய கருத்தரங்குகளில் அதனைப்பற்றிய தெளிவூட்டல்களை வழங்கி வருகின்றார். ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளான தமிழரசுக் கட்சியோ ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ, இந்த விவகாரத்தில் எந்த அக்கறையையும் காட்டவில்லை.
“ஏக்கியராச்சிய” யோசனை
கஜேந்திரகுமாரின் எதிர்வினைகளினாலேயே இந்த விவகாரம் மீண்டும் சிறியளவில் அரங்கிற்கு வந்துள்ளது.
“ஏக்கியராச்சிய” யோசனை இடைக்கால அறிக்கை என்ற அடிப்படையிலேயே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
நான்கு நாட்கள் விவாதமும் இடம்பெற்றது. இறுதியில் நல்லாட்சி அரசாங்கத்திற்கு பிரச்சினை வந்ததால் விவகாரம் கிடப்பில் போடப்பட்டது. மகிந்தர் பிரிவினர் இனவாத நிலையில் நின்று கடுமையாக எதிர்த்தனர். முஸ்லீம் தரப்பில் ரவூப்ஹக்கீம் தரப்பினர் ஆதரவு தெரிவித்திருந்தாலும் அதாவுல்லா , ஹிஸ்புல்லா போன்றோர் எதிர்ப்பைப் பதிவு செய்தனர் .
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தமிழ் மக்கள் நிலை நின்று கடுமையாக எதிர்த்தது.
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் எதிர்த்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. தமிழ் சிவில் சமூகம் ஊடகவியலாளர் மாநாட்டின் மூலம் எதிர்ப்பைக் காட்டியது. மகாநாயக்கர்களும் பேரினவாத நிலை நின்று எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். அவர்களின் கருத்துக்கள் வழமை போன்று மிகைப்படுத்தப் பட்டவையாகவே இருந்தன.
1981 இன் மாவட்ட அபிவிருத்திச்சபை, 1988 இன் மாகாண சபை என்பவற்றையும் இவர்கள் எதிர்த்ததினால் இதற்கு ஏற்பட்ட எதிர்ப்பு ஆச்சரியப்படத்தக்கதாக இருக்கவில்லை.
தமிழரசுக்கட்சியின் செல்வாக்கு வட மாகாணத்தில் வீழ்ச்சியடைவதற்கு“ஏக்கியராச்சிய” யோசனையை சம்பந்தன் தலைமை ஏற்றுக் கொண்டதும் ஒரு காரணமாக அமைந்தது.
தமிழ் மக்களின் ஆதரவு
தேசிய மக்கள் சக்தியும் தமிழரசுக் கட்சியும் சேர்ந்து இவ் யோசனையை தயாரித்தமையினால் தமிழ் மக்களின் ஆதரவும் இதற்கு கிடைக்கும் என்ற அடிப்படையிலேயே இதனை உயிர்ப்பிக்க முயற்சித்திருக்கலாம்.
சுமந்திரன் இரகசியமாக இந்த விடயத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு பச்சைக்கொடி காட்டியிருக்கலாம்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தைப் பொறுத்தவரை புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பாக எந்த பகிரங்கமான செயற்பாட்டையும் இதுவரை ஆரம்பிக்கவில்லை.
புதிய அரசியல் யாப்பு வந்தால் இனப்பிரச்சினைத் தீர்வையும் அதில் சேர்க்க வேண்டும் என்ற சர்வதேச அழுத்தம் அதற்கு இருக்கின்றது. தவிர பேரினவாதம் உயிர்த்து விடும் என்ற அச்சமும் அதற்கு இருக்கின்றது.
இதனால் புதிய அரசியல் யாப்பு வரும் என தற்போதைக்கு உறுதியாகக் கூற முடியாது. இன்னமும் பொது நிர்வாகமும் இராணுவ நிர்வாகமும் முழுமையாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை.
13 ஆவது திருத்தத்தை உடன் நடைமுறைப்படுத்துங்கள் என்ற பிராந்திய, சர்வதேச அழுத்தத்தை நீர்த்துப் போகச் செய்வதற்கும் இந்தப் புரளியைக் கிளப்பியிருக்கலாம்.
இனப்பிரச்சினை
இனப்பிரச்சினை என்பது தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமாக இருப்பது அழிக்கப்படுவதைக் குறிப்பதால் எந்த அரசியல் தீர்வும் இந்த இன அழிப்பிலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அரசியல் தீர்வு யோசனையை கொண்டு வரலாம். கொண்டு வராமல் விடலாம் அதற்காக தமிழ்த் தரப்பு வாழாவிருக்க முடியாது. தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு எது என்பதை தமிழ்த்தரப்பு ஒருங்கிணைந்து முன்வைக்க வேண்டியது அவசியமானதாகும்.
13 வது திருத்தத்தில் திருத்தங்களைக் கோரலாம’ அல்லது தமிழ் மக்களுக்கான ஒரு அரசியல் தீர்வை தயாரித்து முன்வைக்கலாம்.
இந்த விடயத்தில் தமிழ்த்தேசியக் கட்சிகள், தமிழ் சிவில் அமைப்புகள், இணைந்த குழுவை உருவாக்கி முயற்சிப்பது ஆரோக்கியமாக இருக்கும்.” என குறிப்பிட்டுள்ளார்.
