இலங்கைக்கு, விரைவில் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து முக்கிய ஆய்வுக்குழு விஜயம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு தகவல் கிடைத்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் நேற்று (19.12.2025) தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளது.
அதன்போது, நெருக்கடியான காலங்களில் இலங்கைக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தொடர்ந்து அளித்த ஆதரவிற்கு ஜனாதிபதி அநுர குமார நன்றி தெரிவித்தார்.
இந்த அழைப்பின் போது, வெள்ளத்தால் ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்கு ஷேக் முகமது பின் சயீத், தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.
மேலும், பேரிடரால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் போது நாட்டின் பாதுகாப்பு மற்றும் மீள்தன்மையை ஸ்திரப்படுத்தியுள்ள ஜனாதிபதி அநுரவுக்கு, அவர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
முக்கிய நடவடிக்கை
இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவுக்கு ஏற்ப கூடுதல் ஆதரவு வழிகளை ஆராய்வதற்காக, சேதத்தின் அளவை மதிப்பிடுவதற்கும் வழங்கக்கூடிய உதவியின் தன்மையைத் தீர்மானிப்பதற்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இலங்கைக்கு ஒரு குழுவை அனுப்பும் என்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
இந்த உதவி, இயற்கை பேரழிவுகள் மற்றும் அவசரநிலைகளால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு சரியான நேரத்தில் ஆதரவை வழங்குவதற்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸின் நீண்டகால மனிதாபிமானக் கொள்கையின் ஒரு பகுதியாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை தொடர்ந்து, சர்வதேச உதவிக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நிறுவனம் மற்றும் எமிரேட்ஸ் ரெட் கிரசண்ட் மூலம் அவசரகால நிவாரண நடவடிக்கைகள் விரைவாகத் தொடங்கப்பட்டன.
இந்த நடவடிக்கைகளில் அபுதாபி சிவில் பாதுகாப்பு குழுக்களால், மிக மோசமான பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடல் மற்றும் மீட்புப் பணிகள், இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் அவசரகால தங்குமிடப் பொருட்களை வழங்குதல் ஆகியவை மேற்கொள்ளப்பட்டன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உடனடி நடவடிக்கையை ஜனாதிபதி அநுர வரவேற்றதுடன் இது தொடர்ச்சியான நிவாரண முயற்சிகளுக்கு ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான மற்றும் நீடித்த உறவுகளின் பிரதிபலிப்பாகவும் சுட்டிக்காட்டினார்.
