Home இலங்கை அரசியல் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் மாகாண சபைத் தேர்தல்: மகிந்த தேசப்பிரிய ஆரூடம்

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் மாகாண சபைத் தேர்தல்: மகிந்த தேசப்பிரிய ஆரூடம்

0

தேர்தல் ஒன்றை பிற்போடுவது தவறான செயல் என நீதிமன்றம் அங்கீகரித்தமை மக்களுக்குக் கிடைத்த வெற்றி என உள்ளுராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணய தேசியக் குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதன்படி ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என நம்புவதாக அவர் கூறியுள்ளார்.

அனுராதபுரத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் ஒத்திவைப்பு

மேலும்,  “எந்தவொரு தேர்தலையும் நடத்தாமல் அல்லது ஒத்திவைப்பதன் ஊடாக மக்களின் உரிமைகள் மீறப்படுவதாக உயர் நீதிமன்றம் இதற்கு முன்பு பலமுறை தீர்ப்பளித்துள்ளது

இந்த நிலையில், ​​இந்த தீர்ப்பு தொடர்பில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

நீதி வழங்கப்பட்டுள்ளதாகவே நான் காண்கிறேன்.ஆனால் மிகவும் தாமதம்.

இதன்படி, ஜனாதிபதித் தேர்தல் முடிந்தவுடன் இந்த ஆண்டு இந்த வாக்கெடுப்பை நடத்த ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்”என்றார்.

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

நிதியமைச்சர் என்ற ரீதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாமல் அடிப்படை மனித உரிமைகளை ஜனாதிபதி மீறியுள்ளார் என உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, மற்றும் பஃப்ரல் நிறுவனம் ஆகிய அமைப்புகள் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே நீதிமன்றம் குறித்த தீர்ப்பை வழங்கியது.

கடந்த வருடம் மார்ச் மாதம் 09 ஆம் திகதி திட்டமிட்டபடி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாமல் அடிப்படை மனித உரிமைகளை ஜனாதிபதி மீறியுள்ளார் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதன்படி, உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, விஜித் மலல்கொட, முர்து பெர்னாண்டோ, காமினி அமரசேகர மற்றும் யசந்த கோதாகொட ஆகிய ஐவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

தேர்தல் ஆணைக்குழு

தேர்தல் ஆணைக்குழுவினால் திட்டமிடப்பட்டிருந்ததன் பிரகாரம் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9ம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாமையினால் நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாகத் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இரண்டாவது தடவையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த 11.04.2023 அன்று அறிவித்தது.

தேர்தலை திட்டமிட்டபடி நடத்த பல்வேறு தடைகள் இருந்தபோதிலும், தேவையான நிதி ஒதுக்கீடுகள் கிடைக்காததாலும், ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களாலும் தேர்தலை ஒத்திவைக்க நேரிட்டதாக ஆணைக்குழு விளக்கமளித்தது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளும் தொடரும் எனவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Source: https://tamilwin.com/article/presidential-election-after-provincial-election-1724406115

NO COMMENTS

Exit mobile version