Home இலங்கை பொருளாதாரம் இலங்கையில் டீசலின் விலை லீற்றருக்கு ரூ.515–530 ஆகு உயரும் அபாயம்

இலங்கையில் டீசலின் விலை லீற்றருக்கு ரூ.515–530 ஆகு உயரும் அபாயம்

0

மத்திய கிழக்கில் நிலவும் தீவிரமான இராணுவ பதற்றம் காரணமாக உலக சந்தையில் டீசல் விலை வேகமாக அதிகரித்துள்ள நிலையில், இலங்கையின் தற்போதைய எரிபொருள் விலைச் சூத்திரம் மற்றும் வரி விகிதங்களின் அடிப்படையில், உள்நாட்டு சந்தையில் ஒரு லீற்றர் ஆட்டோ டீசலின் விலை 515 முதல் 530 ரூபாய் வரை உயரக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹவுதி போராளிகள் பாப் அல்-மந்தப் நீரிணை பகுதியில் தங்களது கட்டுப்பாட்டை வலுப்படுத்தியுள்ளதுடன், ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்தி வருவதால், கடந்த பெப்ரவரி மாதத்துக்குப் பின்னர் பதிவான அதிகபட்ச டீசல் விலை தற்போது ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கை தனது டீசல் இறக்குமதிக்கான விலையை கணக்கிடுவதில் அடிப்படையாகக் கொள்ளும் சிங்கப்பூர் Platts சந்தையில், ஒரு பீப்பாய் டீசலின் விலை முன்னர் சுமார் 90 அமெரிக்க டொலராக இருந்த நிலையில், தற்போது சுமார் 100 வீதம் அதிகரித்து 180.60 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.

டீசலின் அடிப்படை விலை சுமார் 375

இதனுடன், Brent வகை கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாய்க்கு 108 அமெரிக்க டொலராகவும், WTI கச்சா எண்ணெயின் விலை 103.30 அமெரிக்க டொலராகவும் பதிவாகியுள்ளது.

ஒரு அமெரிக்க டொலரின் மதிப்பு 330 ரூபாய் எனக் கணக்கிட்டால், 180.60 டொலர் பெறுமதியான ஒரு பீப்பாய் டீசலின் (159 லீற்றர்) கொள்வனவு செலவு மட்டும் சுமார் 59,598 ரூபாயாக அமைகிறது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு லீற்றர் டீசலின் அடிப்படை விலை சுமார் 375 ரூபாய் என கணக்கிடப்படுகிறது.

மத்திய கிழக்கின் அபாயகரமான கடல் வழித்தடங்கள் ஊடாக கப்பல்கள் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், கப்பல் கட்டணம் மற்றும் காப்புறுதி பிரீமியம் உள்ளிட்ட செலவுகளும் அதிகரித்துள்ளன.

இதற்காக ஒரு கப்பலுக்கு கூடுதலாக 10 முதல் 20 மில்லியன் அமெரிக்க டொலர் வரை செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக டீசலை இலங்கைக்கு கொண்டு வந்து இறக்கும் மொத்த செலவு மேலும் அதிகரிக்கிறது.

அரசாங்க வரிகள்

இறக்குமதி மற்றும் இறக்குமதி இறக்குமதி தொடர்பான செலவுகளுடன் அரசாங்க வரிகள், செயற்பாட்டு செலவுகள், போக்குவரத்து கட்டணங்கள் மற்றும் விநியோகஸ்தர் தரகு ஆகியவை இணைக்கப்படும்போது, செலவுகளை ஈடுகட்ட உள்நாட்டு சந்தையில் ஒரு லீற்றர் டீசலை 515 ரூபாய்க்கும் அதிகமான விலையில் விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நடப்பு ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் இலங்கையின் எரிபொருள் இறக்குமதிக்காக 3.62 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது 2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 68 வீத அதிகரிப்பாகும்.

உலக சந்தையில் எரிபொருள் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவது, இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்புக்கும் உள்நாட்டு பணவீக்கத்திற்கும் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கிய காரணியாக மாறியுள்ளதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

Source: https://ibctamil.com/article/price-of-diesel-in-sri-lanka-rs-515-530-per-litre-1789514254

NO COMMENTS

Exit mobile version