இலங்கையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களை நடாத்திச் செல்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
தனியார் எரிபொருள் நிறுவனங்களால் 500 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளமையினால், இந்த நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது.
அதற்கமைய, லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்திற்கு சொந்தமான 250 எரிபொருள் நிரப்பு நிலையங்கள், சினொபெக் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் 150 மற்றும் ஆர்.எம். பார்க் நிறுவனத்திற்கு சொந்தமான 100 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் என மொத்தம் 500 நிலையங்களுக்கு டீசல் விநியோகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
எரிபொருள் இறக்குமதி
குறித்த நிறுவனங்கள் நாட்டிற்கு எரிபொருளை இறக்குமதி செய்யும் விலைக்கும், உள்நாட்டுச் சந்தையில் விற்பனை செய்யும் விலைக்கும் இடையில் காணப்படும் பாரிய இடைவெளியே இந்த நிலைக்குக் காரணம் என சங்கத்தின் தலைவர் குமார் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“இதன் காரணமாகப் பொதுமக்களும், எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களும் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
தற்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களை நடாத்திச் செல்வதிலும் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
விலை சூத்திரம்
தற்போதைய அரசாங்கத்தின் விலைச் சூத்திரத்திற்கு அமைவாக எரிபொருளை விற்பனை செய்வதனால் தமக்கு பாரிய நட்டம் ஏற்படும் என குறித்த தனியார் நிறுவனங்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல்களின் போது தெரிவித்தனர்.
இவ்வாறு ஏற்படும் நட்டத்தைக் குறைத்துக் கொள்வதற்காகவே குறித்த நிறுவனங்கள் சந்தைக்கான எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தியுள்ளன.
எனினும், இந்த நிறுவனங்கள் எமக்குத் தொடர்ந்தும் எரிபொருளை வழங்குவதாக உறுதியளித்திருந்தன” என குமார் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
Source: https://tamilwin.com/article/restrictions-on-fuel-supply-at-500-fuel-stations-1789436026
