Home இலங்கை சமூகம் மன்னாரில் புதிதாக திறக்கப்படவுள்ள மதுபானசாலை: எதிர்ப்பு தெரிவித்து வெடித்துள்ள போராட்டம்

மன்னாரில் புதிதாக திறக்கப்படவுள்ள மதுபானசாலை: எதிர்ப்பு தெரிவித்து வெடித்துள்ள போராட்டம்

0

மன்னார் (Mannar) – தலைமன்னார்  பகுதியில் புதிதாக திறக்கப்பட உள்ள
மதுவிற்பனை நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பிரதேச மக்கள் மற்றும்
பொதுஅமைப்புகளின் பிரதிநிதிகள் இணைந்து எதிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த போராட்டமானது, இன்றைய தினம் (30) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் இடம்பெற்றுள்ளது.

இதன்போது கருத்துத் தெரிவித்த போராட்டக்காரர்கள், மன்னார் நகர பகுதியில் ஏற்கனவே ஒரு மதுவிற்பனை நிலையம் அமைக்கப்பட்டு
திறக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

பிரதேச செயலகம்

இந்த நிலையில், தலைமன்னார் பிரதான வீதி 2ஆம் கட்டை பகுதியில் புதிய மது விற்பனை நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் மக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்து வந்துள்ளனர்.

குறிப்பாக, மன்னார் பிரதேச செயலகம் எவ்வித அனுமதியும் வழங்காத நிலையில்
தற்போது கொழும்பில் (Colombo) அனுமதி பெற்று இன்னும் சில தினங்களில் குறித்த மது விற்பனை
நிலையத்தை திறக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக அண்மையில் மன்னர் மது வரி திணைக்களத்திற்கு
சென்று கேட்ட போது அவர்களும் புதிதாக திறக்கப்படவுள்ள மது விற்பனை நிலையத்திற்கு ஆதரவாக தம்மோடு கடும் தொனியில் கதைத்ததாகவும்
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இளைஞர் படையணி

”தற்போது மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி 2ஆம் கட்டை பகுதியில் புதிய மது
விற்பனை நிலையம் திறக்கப்பட உள்ள நிலையில் அதனைச் சுற்றி மக்களின்
குடியிறுப்புகள் அமைந்துள்ளது.

காமன்ஸ், இளைஞர் படையணி முகாம்,தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் உற்பட மக்களின்
செயல்பாடுகள் அதிகரித்த இடமாக குறித்த பகுதி காணப்படுகிறது.

குறித்த மது விற்பனை நிலையம் திறக்கப்பட்டால் அப்பகுதியில் பல்வேறு கலாச்சார
சீர் கேடுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும் உடனடியாக குறித்த மது விற்பனை
நிலையத்தை அங்கிருந்து அகற்ற வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாரிய போராட்டம் 

அத்துடன், குறித்த பகுதியில் இருந்து மது விற்பனை நிலையம் அகற்றப்படாது விட்டால்
மாவட்டம் தழுவிய ரீதியில் ஒரு சில தினங்களில் பாரிய போராட்டம்
முன்னெடுக்கப்படும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், தமது கோரிக்கை அடங்கிய மனு அரசாங்க அதிபருக்கு சென்றடையும் வகையில் மாவட்டச் செயலக அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version