மன்னார் மாவட்டத்தில் இடம் பெற்று வரும் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வு
திட்டங்களை உடனடியாக நிறுத்துமாறு கோரி தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்தநிலையில், மன்னார் மாவட்ட மக்கள், பொது
அமைப்புக்கள்,சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து ஆரம்பித்துள்ள போராட்டம் 10 ஆவது
நாளாக இன்று (12)இடம் பெற்று வருகின்றது.
மன்னார்- தாழ்வுபாடு கிராம மக்கள் இன்றைய தினம் சுழற்சி முறையில் கலந்து
கொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
தொடர் போராட்டம்
நேற்றைய தினம் நள்ளிரவு குறித்த காற்றாலை செயற்திட்டங்களுக்கான பாரிய
உபகரணங்கள் மன்னார் தீவுக்குள் பொலிஸார் பாதுகாப்புடன் எடுத்து வர முற்பட்ட
நிலையில் போராட்டக்காரர்களின் பலத்த எதிர்ப்பின் காரணமாக காற்றாலை உபகரணங்களுடன்
வருகை தந்த பார ஊர்தியினால் உள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டது.
அதே நேரம் பொலிஸார் அராஜகமாக குறித்த போராட்டக்காரர்களை அச்சுறுத்தி புகைப்படம்
எடுத்து போராட்டக்காரர்களை வெளியேற்ற முயன்ற போதும் தொடர்சியான போராட்டம்
காரணமாக மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக குறித்த வாகனம்
நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் குறித்த போராட்டக்காரர்களுக்கும் அதே நேரம்
போராட்டத்துக்கும் எதிராக இன்றைய தினம் மன்னார் பொலிஸார் தடை உத்தரவு ஒன்றை
பெறுவதற்காக மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளதுடன்
குறித்த வழக்கில் போராட்டக்காரர்கள் சார்பாக சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையா உள்ளமை குறிப்பிடத்தக்கது.
