ஏமாற்றுக்காரர்களின் கூடாரமாக இந்த அரசு மாறியுள்ள நிலையில், ஏமாற்றுக்
காரர்களின் தலைவராகவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) செயற்பட்டு வருவதாக
தொழிலாளர் தேசிய முன்னணியின் பிரதித் தலைவரும், நுவரெலியா மாவட்ட
நாடாளுமன்ற உறுப்பினருமான உதயகுமார் ( M. Udayakumar) தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் கூட்டம்
நேற்றையதினம் (10) ஹட்டனில் இடம்பெற்றுள்ளது.
இதன் போது அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும், தொழில் அமைச்சராக செயற்பட்ட மனுஷ
நாணயக்காரவும் (Manusha Nanayakkara) கொட்டகலைக்கு வருகைதந்து 1,700 ரூபா வழங்கப்படும் என
உறுதியளித்தனர்.
ஜனாதிபதி தேர்தல்
மக்களை ஏமாற்றி பட்டாசு கொளுத்தி, பாற்சோறு சமைத்து
நாடகங்களையும் அரங்கேற்றினர்.ஆனால் இது ஏமாற்று நடவடிக்கை என்பது தற்போது உறுதியாகியுள்ளது.
சம்பள உயர்வு
தொடர்பில் வெளியான வர்த்தமானி அறிவித்தல் கூட மீளப்பெறப்பட்டுள்ளது, இவ்வாறு
மலையக மக்களுக்கு துரோகம் செய்ததால்தான் இன்று நாடாளுமன்ற உறுப்புரிமையைக்கூட
மனுஷ நாணயக்கார இழந்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வீட்டுக்கு அனுப்படுவார்,
அதன்பின்னர் பொதுத்தேர்தலில் மலையக அமைச்சரின் கட்சியும் காணாமல்போக
செய்யப்படும். தமக்கு துரோகம் இழைந்த இந்த மூன்று தரப்புகளுக்கும் மக்கள்
நிச்சயம் பாடம் புகட்டுவார்கள்.”என்றார்.
Source: https://ibctamil.com/article/ranil-is-the-leader-of-cheaters-udayakumar-blamed-1723361788
