Home இலங்கை அரசியல் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றி நிச்சயம் இல்லை : அடித்துக் கூறும் அமீர் அலி

ரணில் விக்ரமசிங்கவின் வெற்றி நிச்சயம் இல்லை : அடித்துக் கூறும் அமீர் அலி

0

சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) வெற்றி நிச்சயம் இல்லை என முன்னாள் பிரதி அமைச்சர் எம்.எஸ். அமீர் அலி (Ameer Ali) தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையில் வாக்கு வங்கிகள் உள்ள கட்சியாக மொட்டுக் கட்சியும் (SLPP) ஐக்கிய மக்கள்
சக்தியும் (SJB) தான் காணப்படுகின்றது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி ஆதரவாளர்களுடன் மட்டக்களப்பில் (Batticaloa) இன்று (27) இடம்பெற்ற
கலந்துரையாடல் ஒன்றின் போது அமீர் அலி இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

வாக்கு வங்கிகள் உள்ள கட்சிகள்

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “தற்போதைய தேர்தல் கள நிலவரத்தின்படி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மூன்றாவது இடத்தில்
உள்ளார்.

அடுத்து வரும் சில தினங்களில் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) இந்த இடத்துக்கு வந்து
விடுவார், ஏனெனில் அவர்களது கட்சிக்கு என்று ஒரு வாக்கு வங்கி உள்ளது.

இலங்கையில் வாக்கு வங்கிகள் உள்ள கட்சியாக மொட்டுக் கட்சியும் ஐக்கிய மக்கள்
சக்தியும் தான் காணப்படுகின்றது. ரணிலுடைய கட்சிக்கு வாக்கு வங்கி இல்லை
என்பது எல்லோருக்கும் தெரியும்.

ஜேவிபி (JVP) கட்சிக்கும் 4 இலட்சம் வகையான வாக்குகள்
காணப்படுகிறது. தற்போது அக்கட்சி ஒரு வளர்ச்சி போக்கினை காட்டுகிறது.

நமது ஜனாதிபதி வேட்பாளரின் வெற்றியில் தான் இங்குள்ளவர்களின் வெற்றி தங்கியுள்ளது. உங்களது பகுதிகள் அபிவிருத்தி காணப்பட வேண்டுமானால் சஜித்தின் வெற்றி
முக்கியம்.

சஜித்தின் வெற்றி நிச்சயம்

சஜித் பிரேமதாசாவிற்கு (Sajith Premadasa) 54 இலட்சம் வாக்குகள் ஏற்கனவே உள்ளது. இருப்பினும் மேலதிகமாக 15 இலட்சம் வாக்குகளே எமக்கு தேவைப்படுகின்றது.

அதற்கான
பணிகளை நாம் தற்போது முன்னெடுத்து வருகின்றோம். சஜித்தின் வெற்றி நிச்சயம்
அவருடன் இலகுவாக அணுகி எமது வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும்.

ஏற்கனவே
மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கையிலே அதிகமான வீட்டுத் திட்டங்களை அமைத்துக்
கொடுக்க நடவடிக்கை எடுத்தவர் அவர். ஜனாதிபதி ஆனாலும் இந்த வீடமைப்பு அமைச்சை
தன்னிடமே கொண்டு அனைத்து வேலைகளையும் நிறைவேற்றிக் கொள்ள திட்டமிட்டுள்ளார்.

எனவே ரணில் விக்ரமசிங்கவின் வெற்றி நிச்சயம் இல்லை. அனைவரும் வெற்றி பெறும் வேட்பாளர் கட்சியுடன் இணைந்து பணியாற்ற முன்வருமாறு வேண்டுகின்றோம்“ என தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version