Home இலங்கை அரசியல் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை சீர்திருத்துவதில் உறுதியாக உள்ள ஜனாதிபதி!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை சீர்திருத்துவதில் உறுதியாக உள்ள ஜனாதிபதி!

0

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் போன்ற சட்டங்களை சீர்திருத்துவதில் தான் உறுதியாக உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்தச் சட்டங்கள் அடக்குமுறைக்கான கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவை ஜனநாயகத்திற்குப் பொருந்தாதவை எனவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் 

குறித்த செவ்வியில் மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, “பல தசாப்தங்களாக கட்டமைக்கப்பட்ட அமைப்புகளை நாங்கள் அகற்ற முயற்சிக்கிறோம்.

அரசியல் கலாச்சாரம் மற்றும் நிர்வாகத்தின் நிறுவனப் பழக்கவழக்கங்கள் ஒரே இரவில் மாறாது. அதற்கு நிலையான முயற்சி தேவை. நாம் சரியான திசையில் நகர்கிறோமா, நமது சீர்திருத்தங்கள் பலனளிக்கின்றனவா என்பதை அனைவரும் பார்க்க வேண்டும்.” என தெரிவித்தார்.

ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டது தனிப்பட்ட அரசியல் பழிவாங்கலுக்காகவே என்ற குற்றச்சாட்டை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதன்போது முற்றிலுமாக நிராகரித்தார். 

மேலும் விளக்கமளித்த ஜனாதிபதி, “ரணில் விக்ரமசிங்கவின் கைது நியாயமானதா என்பது ஆதாரங்களைப் பொறுத்தது.

ஊழல் பல தசாப்தங்களாக நிறுவனங்களில் ஆழமாக வேரூன்றியுள்ளது. இதன் பொருள் கைதுகள் மட்டுமல்ல, விடயங்களை சரிசெய்ய முறையான மாற்றமும் தேவை.”

டித்வா சூறாவளி

டித்வா சூறாவளியிலிருந்து நாட்டை மீள கட்டியெழுப்புது தற்போது ஏனைய சவால்களை விட மிகப் பிரதானமாக உள்ளது என தெரிவித்ததுடன் சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கை கடன் நெருக்கடி மற்றும் அரசியல் கொந்தளிப்பில் இருந்து மீள போராடி வருவதாக ஜனாதிபதி குறித்த நேர்காணலில் தெரிவித்தார்.

காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படக்கூடிய கடன்பட்ட நாடுகளுக்கு ஒரு புதிய அணுகுமுறையின் அவசியத்தையும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.

நமது நாடு இதுவரை சந்தித்த எந்தவொரு இயற்கை பேரழிவையும் விட சேதம் மிக அதிகமாக இருக்கலாம். எனவே, காலநிலை பேரழிவுகளிலிருந்து நாம் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் மற்றும் அதே நேரத்தில் நமது கடனை செலுத்த வேண்டும் என தெரிவித்த ஜனாதிபதி இதனால்தான் காலநிலை பாதிக்கப்படக்கூடிய நாடுகளுக்கான கடன் நிலைத்தன்மை கட்டமைப்பு மாற வேண்டும்.” எனவும் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் பேரிடர் சூழ்நிலையின் போது நட்பு நாடுகளிலிருந்து கிடைத்த உதவிகளையும் ஜனாதிபதி இதன்போது நினைவுகூர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version