முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன(rajitha senaratne) தனக்கு வீட்டு உணவுகளை பெற்றுக்கொள்ள அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் ராஜித தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
மருத்துவ பரிசோதனை
இதேவேளை ராஜித சேனாரத்னவை பரிசோதித்த சிறைச்சாலை வைத்தியர்கள், அவரை வைத்தியசாலையில் அனுமதிக்கும் அளவுக்கு நோய் பாதிப்பு எதுவும் இல்லை என தெரிவித்துள்ளதாகவும் சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு மேல்நீதிமன்றில் நேற்றைய தினம் காலை முன்னிலையானதை தொடர்ந்து அவரை கொழும்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்துமாறும் அதுவரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு
பின்னர் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு நீதவான் நீதிமன்றில் நேற்று காலை முற்படுத்தப்பட்டதையடுத்து அவரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
