நிதியமைச்சின் தற்போதைய செயலாளர் மஹிந்த சிறிவர்தன (Mahinda Siriwardena) இந்த மாத இறுதியில் நிதியமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெறுவார் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
அதன்பின்னர் அவர் ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) மாற்று நிர்வாக பணிப்பாளராக தனது கடமைகளை ஏற்றுக்கொள்வார் என்றும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று (02) காலை நடைபெற்ற தேசிய வரி வாரத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
ஆசிய அபிவிருத்தி வங்கி
மஹிந்த சிறிவர்த்தனவின் ஓய்வு குறித்து தொடர்ந்து கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, ”அவர் கூறியது போல சமீப கால வரலாற்றில் மற்றும் உலக வரலாற்றிலும் மிகக் குறைந்த வரி விதிக்கும் அரசாக நாம் மாறிவிட்டோம்.
இது நமது நாட்டை மீண்டும் ஒரு சாதாரண வரி முறைக்கு மாற்றுவதற்கான ஒரு முயற்சியாகும், மேலும் ஏராளமான நிறுவன சீர்திருத்தங்கள் மற்றும் சட்ட சீர்திருத்தங்கள் நிதி அமைச்சின் செயலாளர் என்ற வகையில் மஹிந்த சிறிவர்தன மேற்கொண்டுள்ளார்.
இந்த மாத இறுதியில் அவர் நமது நிதி அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து விடைபெறுவார் என்று நினைக்கிறேன். இலங்கை உட்பட 7 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆசிய அபிவிருத்தி வங்கியில் மாற்று நிர்வாக பணிப்பாளராக கடமையாற்ற இந்த மாத இறுதியில் அவர் புறப்படவுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வரி சீர்திருத்தங்களைச் செயற்படுத்துவதில் அவர் வகித்த பங்கை நாம் பாராட்ட வேண்டும்” என தெரிவித்தார்.
