விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் (S. Viyalendiran) விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலஞ்சம் பெறுவதற்கு உதவி மற்றும் ஆதரவு வழங்கிய குற்றச்சாட்டில் வியாழேந்திரன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில் அவரை எதிர்வரும் 08ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு
குறித்த வழக்கு இன்றைய தினம் (01) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னும் முடிவடையவில்லை என்று இலஞ்ச ஆணைக்குழு அதிகாரிகள் அளித்த தகவலை ஏற்றுக்கொண்ட கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதேவேளை இலஞ்சம் பெறுவதற்கு உடந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டில் கடந்த 25.03.2025 அன்று இலஞ்சம், ஊழல் ஆணைக்குழுவால் வியாழேந்திரன் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
