மக்களைப் பலிகொடுத்து ஆட்சிக்கு வந்த ஜே.வி.பி அரசாங்கத்திற்கு மக்கள் படும் இன்னல்கள் புரியவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பு தேர்தல் தொகுதிக்குட்பட்ட தளுவாகொடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் இவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “தற்போது அரிசி, தேங்காய் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் கூட அதிகரித்துள்ளதோடு, VAT வரியும் அதிகரிக்கப்பட்டுள்ளன, மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகள் இல்லை. இவற்றுக்கு பதில்களும் இல்லை.
வறுமை நிலை
எடுக்கும் முயற்சிகளையும் காணவில்லை. இது குறித்து சபையில் கேள்வி எழுப்பினால் 76 வருடங்கள் குறித்து குறை கூறுகின்றனர். எங்களுக்கு தெரியும் என்றும்
கூறுகின்றனர்.
அரசிற்கு தெளிவான கொள்கை இல்லாமையே இதற்கு முதற் காரணமாகும்.
மக்கள் தமது வருமான மூலங்களை இழந்துள்ளமையால் வறுமை அதிகரித்து வருகிறது. இந்த தருணத்தில் நாட்டில் வறுமை நிலை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே வருகிறது.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன், 33% ஆல் மின்சாரக் கட்டணத்தைக் குறைப்போம் என்றனர். எண்ணெய் விலையைக் குறைப்போம் என்றனர்.
அரசாங்கத்தின் திட்டம்
இதில் நடந்து வரும் திருட்டு, ஊழல், மோசடிகளை ஒழிப்போம், இவற்றின் விலைகளைக் குறைத்து மக்களுக்கு சலுகை விலையில் தருவோம் என்றனர்.
ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை. எடுக்கும் நடவடிக்கைகளையும் காணவில்லை.
இதனால் விவசாயிகள், மீனவர்கள், தொழில் முனைவோர்கள் கூட நிர்க்கதிகளை முகம்கொடுத்து வருகின்றனர்.
பொருட்களின் விலையை கட்டுப்படுத்தும் திட்டம் எதுவும் இந்த அரசாங்கத்திடம் இல்லை.
வருமானங்கள் குறைந்துள்ள தருணத்தில், பொருட்களின் விலைகள் தாறுமாறாக அதிகரித்துள்ளன.” என்றார்.
