மக்களைத் தவறாக வழிநடத்தும் ஏமாற்று வேலைத்திட்டங்களையே
தற்போதைய அரசு முன்னெடுத்து வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
பிரேமதாஸ குற்றஞ்சாட்டினார்.
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை இலக்காகக் கொண்டு களுத்துறை மாவட்ட
வேட்பாளர்களுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே
எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.
அரசியல் பல்டி
அவர் மேலும் உரையாற்றுகையில், இறுதி வரவு – செலவுத் திட்ட உரையின்போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பல
விடயங்களை ஐக்கிய மக்கள் சக்தி மீது முன்வைத்தார். தற்போதைய அரசு பல்டி
அடிக்காது என ஜனாதிபதி தெரிவித்த போதிலும், மக்கள் விடுதலை முன்னணியினர் அன்று
அரசியல் பல்டிகளை அடித்தனர்.
விமல் வீரவன்ச மக்கள் விடுதலை முன்னனணியை விட்டு
வெளியேறினார். அமைச்சரவை அமைச்சர்களாக இருந்த ஜே.வி.பி. உறுப்பினர்கள் பலர்
கட்சியை விட்டு வெளியேறிய சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன. மக்கள் விடுதலை
முன்னனணியிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன.
தற்போதைய அரசு போன்று மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறாமல், மக்கள்
சார்பான முடிவுகளையே ஐக்கிய மக்கள் சக்தி எடுக்கும். மக்களைத் தவறாக
வழிநடத்தும் ஏமாற்று வேலைத்திட்டங்களையே தற்போதைய அரசு முன்னெடுத்து
வருகின்றது.
ஆட்சிக்கு வந்ததும் சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைகளை மாற்றுவோம் என்று
கூறினர்.
முன்னாள் ஜனாதிபதியின் கொள்கை
ஆனால், தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்து எந்த மாற்றமும் இல்லாமல்
முன்னாள் ஜனாதிபதியின் (ரணில் விக்ரமசிங்க) அதே தொங்கு பாலத்திலயே
பயணித்துக் கொண்டிருக்கின்றது. முன்னாள் ஜனாதிபதியின் அதே கொள்கைகளையே இந்த
அரசும் பின்பற்றுகின்றது.
மக்களுக்கு ஒன்று சொல்லி ஆட்சிக்கு வந்த பிறகு வேறு எதையோ செய்து
கொண்டிருக்கின்றனர்.
ஐக்கிய மக்கள் சக்தியால் இது போன்ற எரிச்சலூட்டும்
வேலையைச் செய்ய முடியாது. மக்களை ஏமாற்றி ஆட்சியைக் கைப்பற்றி வழங்கிய
வாக்குறுதிகளுக்குப் புறம்பாக வேறு கொள்கைகளை முன்னெடுப்பது வெட்ககேடான
செயலாகும். மக்களை ஏமாற்றும் முடிவுகளை எடுக்க ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும்
தயாரில்லை என தெரிவித்துள்ளார்.
