Home இந்தியா தமிழர்களின் மூத்த பெரும் தலைமை சம்பந்தனின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள இந்திய தலைவர்கள்

தமிழர்களின் மூத்த பெரும் தலைமை சம்பந்தனின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள இந்திய தலைவர்கள்

0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தனின் மறைவிற்கு இந்திய அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இலங்கைத் தமிழர் தலைவர் ஆர்.சம்பந்தனின் மறைவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த வருத்தம் கொண்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

எஸ். ஜெய்சங்கரின் உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் அவர் இந்த இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.

ஜெய்சங்கர்

குறித்த பதிவில், “இலங்கை தமிழ் தலைவர் இரா.சம்பந்தனின் மறைவுச் செய்தி அறிந்து ஆழ்ந்த துயரடைந்தேன்.

பல தசாப்தகாலமாக எனக்கும் அவருக்கும் இடையில் நடைபெற்ற பல்வேறு சந்திப்புகள் மற்றும் உரையாடல்களை இச்சந்தர்ப்பத்தில் நினைவில்கொள்கின்றேன்.

இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் சமத்துவம், கௌரவம் மற்றும் நீதிக்கான போராட்டத்துக்காக அவர் தனது முழு வாழ்வையும் அர்ப்பணித்திருந்தார்.

அவரது குடும்பத்தினருக்கும் அபிமானிகளுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.” என பதிவிட்டுள்ளார்.

 எடப்பாடி கே. பழனிசாமி

அதேவேளை, இரா.சம்பந்தனின் மறைவிற்கு தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமியும்(Edappadi K. Palaniswami )தனது இரங்கலினை தெரிவித்துள்ளார்.

அவர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில், “இலங்கைத் தமிழர் அரசியல் வரலாற்றில் மறக்க முடியாதவரும், மறுக்க முடியாதவருமாகிய, ஈழ தமிழ்ச் சமூகத்தின் மிகப்பெரும் தூணாகத் திகழ்ந்தவரும் ஆன, இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் (Rajavarothiam Sampanthan), தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், அவர் நேற்று (30.6.2024) இரவு 11 மணியளவில் தனது 91ஆவது வயதில் கொழும்பில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன்.

இலங்கை தமிழரின் அடுத்த தலைமுறை பாதுக்காப்பான வாழ்வியலை கட்டமைக்க, ஒரு சரியான அடித்தளத்தை அமைத்த தமிழின தலைவரான அவரது இழப்பு ஈழத் தமிழர் வரலாற்றில் ஈடு செய்ய முடியாத ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது.

அன்னாரது ஆன்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

சம்மந்தனின் மறைவுக்கு இந்திய பிரதமர் மோடியும் இரங்கல் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version