Home உலகம் ஈழத் தமிழர் உரிமைக்காக இறுதிவரை குரல் கொடுத்தஇரா.சம்பந்தன் நம் நெஞ்சில் நிறைந்தார்! வைகோ இரங்கல்

ஈழத் தமிழர் உரிமைக்காக இறுதிவரை குரல் கொடுத்தஇரா.சம்பந்தன் நம் நெஞ்சில் நிறைந்தார்! வைகோ இரங்கல்

0

ஈழத் தமிழர் உரிமைக்காக இறுதிவரை குரல் கொடுத்தஇரா.சம்பந்தன் நம் நெஞ்சில் நிறைந்தார் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ
இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில்,
“ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்காக இறுதி மூச்சு அடக்கும்வரை நாடாளுமன்றத்திலும்,
மக்கள் மன்றத்திலும், சர்வதேச அளவிலும் குரல் கொடுத்த இலங்கை தமிழ் தேசியக்
கூட்டமைப்பின் மூத்த தலைவரான இரா.சம்பந்தன் தன் 91 ஆம் வயதில்
30.06.2024 அன்று கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு
காரணமாக மறைந்தார் என்ற செய்தி அறிந்து ஆறாத் துயர் அடைந்தேன்.

1956 ஆம் ஆண்டு தமிழரசு கட்சியில் இணைந்த அவர், தமிழர் விடுதலை கூட்டணி
சார்பில் திரிகோணமலை தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக 1977 ஆம் ஆண்டு
இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினரானார்.

தமிழர்களின் அரசியல் பிரதிநிதி

இலங்கை அரசியலமைப்பின் ஆறாவது சட்டத் திருத்தம் தனிநாடு கோரிக்கைக்கு எதிராக
இருப்பதைக் கண்டித்து, கருப்பு ஜூலை எனும் தமிழினப்படுகொலை நடந்த 1983 ஆம்
ஆண்டில் தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற அவைகளை புறக்கணித்தது. இதன்
காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்து இரா.சம்பந்தன் விலக்கி
வைக்கப்பட்டார்.

2001 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்ட
போது, மீண்டும் இரா.சம்பந்தன் நாடாளுமன்ற உறுப்பினராகத்
தேர்ந்தெடுக்கப்பட்டார். இலங்கைத் தமிழர்களின் ஒரே அரசியல் பிரதிநிதியாக
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஏற்றுக்கொள்ளுமாறு தமிழீழ விடுதலைப் புலிகள்
அமைப்பு அப்போது வலியுறுத்தியது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச்செயலாளர், துணைத் தலைவர், இணைப் பொருளாளர்
ஆகிய பொறுப்புகளில் இவர் பணியாற்றினார். 2004 ஆம் ஆண்டில் இலங்கை தமிழர்
கட்சி, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாடு கொண்டிருந்த தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பில் அங்கம் வகித்து, இவர் தலைமையில் அப்போது நடைபெற்ற நாடாளுமன்றத்
தேர்தலில் 22 இடங்களை வென்றது.

 ஈழத்தமிழர் உரிமை

இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராக நாவலர் அ.அமிர்தலிங்கத்திற்குப்
பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், அந்தக் காலகட்டத்தில் ஈழத்தமிழர்
உரிமைக்காகவும், சிறுபான்மையினரான இசுலாமியர்களின் உரிமைகளுக்காகவும்
தொடர்ந்து குரல் கொடுத்தார்.

2009 ஆம் ஆண்டில் முள்ளிவாய்க்கால் துயரத்திற்குப் பின்னர், தமிழர் வாழும்
பகுதிகளில் இராணுவ ஆக்கிரமிப்பு அகற்றப்பட வேண்டும், ஈழத் தமிழ் அரசியல்
கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். தமிழர் பகுதிகளில் சிங்களவர்களின்
அத்துமீறிய குடியேற்றம், சிங்கள அரசால் காணாமல் ஆக்கப்பட்ட ஈழத் தமிழர்களின்
அவலம் என ஈழத்தமிழர்களுக்கு அனைத்து வகையிலும் சமஉரிமை வழங்க வேண்டும் என்று
தொடர்ந்து இவர் குரல் கொடுத்தார்.

இரா.சம்பந்தன் அவர்களது மறைவு ஈழத்தமிழர்களுக்கும், உலகம் முழுவதும் வாழும்
தமிழ் உறவுகளுக்கும் பேரிழப்பாகும். அவரது மறைவால் பரிதவிக்கும் அவருடைய
தமிழரசு கட்சியினருக்கும், அவரது இல்லத்தினருக்கும் மறுமலர்ச்சி திராவிட
முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும்
தெரிவித்துக்கொள்கிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version