தமிழர்களின் வரலாற்றை உள்ளடக்கிய வரலாற்றுப் பாடத்தைக் கட்டாயப் பாடமாக
கற்பிப்பதன் ஊடாகவே எதிர்காலத்தில் அனைத்து இன மக்களும் சமமான அந்தஸ்துடன்
வாழ்வதற்குத் தயாராவார்கள் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற
உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி
அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போது
அவர் இதனைத் தெரிவித்தார்.
கல்வி மறுசீரமைப்பு
இதேவேளை, அரசால் முன்னெடுக்கப்படும் கல்வி மறுசீரமைப்புக்கு நாம் முழுமையான
ஆதரவை வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் குறிப்பிட்டார்.
வெளி மாவட்டங்களிலிருந்து வருகை தரும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்குத்
தேவையான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது குறித்து அரசு கவனம்
செலுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன்
கேட்டுக்கொண்டார்.
