2024 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கை இன்று (08) முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்த பின்னர் 40 நாட்களுக்குள் பெறுபேறுகள் வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர (Amit Jayasundara) தெரிவித்துள்ளார்.
புலமைப்பரிசில் பரீட்சை
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் இடம்பெற்றிருந்தது.
இந்தநிலையில், பரீட்சைக்கு முன்னர், பகுதி 01 இல் காணப்பட்ட மூன்று வினாக்கள் வெளியானமை தெரியவந்ததையடுத்து பாரிய சர்ச்சை ஏற்பட்டது.
இதனால் பெறுபேறுகளை வெளியிட நீதி மன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து, முதல் தாளில் இடம்பெற்ற மூன்று வினாக்கள் தொடர்பிலான விசாரணைகளின் பின்னர், அதற்கான இலவச புள்ளிகளை வழங்குவதற்கு பரீட்சை திணைக்களம் அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது.
குறித்த பரீட்சையில், 244,092 மாணவர்கள் சிங்கள மொழி மூலமும் 79,787 மாணவர்கள் தமிழ் மொழி மூலமும் மொத்தம் 323,879 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Source: https://ibctamil.com/article/scholarship-paper-marking-today-examination-dept-1736313105
