நாட்டில் தற்போது பெய்து வரும் வடகீழ் பருவப்பெயர்ச்சி மழை காரணமாக மட்டக்களப்பு
மாவட்டத்தின் பெரும்பாலான தாழ் நிலங்களில் வெள்ளநீர் தேங்கியுள்ளது.
இந்த நிலையில் வெள்ளநீர் வழிந்தோட முடியாமலுள்ள பகுதிகளில் உள்ள மக்கள்
மிகுந்த அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்தவகையில் மட்டக்களப்பு – பட்டிருப்பு கல்வி வலயத்தின் கீழுள்ள களுவாஞ்சிகுடி
சரஸ்வதி வித்தியாலயம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
கற்றல், கற்பித்தல் நடவடிக்கை
பாடசாலை வளாகம் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளதனால் அங்கு கல்வி பயிலும் மாணவர்களும், ஆசிரியர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதுடன் கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு பாடசாலை வளாகம் முற்றாக வெள்ளநீரினால் மூழ்கியுள்ளதனால் தமது
பிள்ளைகளுக்கு நோய் தொற்று ஏற்படும் நிலைமையும் ஏற்பட்டுள்ளதாக பெற்றோர்
தெரிவிக்கின்றனர்.
பெற்றோர் கோரிக்கை
இதேவேளை மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளரிடம், பாடசாலை நிர்வாகத்தினர் வெள்ள நிமைமை தொடர்பில் தெரிவித்ததற்கு
இணங்க, ஜே.சி.பி. இயந்திரம் மூலம் தற்காலிக கால்வாய் அகழ்ந்து பாடசாலையில்
தேங்கியுள்ள வெள்ள நீரை வழிந்தோட செய்யும் நடவடிக்கை
முன்னெடுக்கப்பட்டுள்ளது.
களுவாஞ்சிக்குடி சரஸ்வதி வித்தியாலயம் வருடாந்தம் இவ்வாறு வெள்ளத்தில்
மூழ்குவதாகவும், இதற்கு நிரந்தர தீர்வாக பாடசாலை வளாத்தில் மண் இட்டு நிரப்பி,
வடிகான் அமைத்து தரவேண்டும் எனவும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
