Home இலங்கை அரசியல் ஜனாதிபதி தேர்தலில் இந்தியாவின் முக்கிய காய் நகர்த்தல்: இலக்கு வைக்கப்பட்ட வடக்கு அரசியல்

ஜனாதிபதி தேர்தலில் இந்தியாவின் முக்கிய காய் நகர்த்தல்: இலக்கு வைக்கப்பட்ட வடக்கு அரசியல்

0

புதிய ஜனாதிபதியின் கீழ் இலங்கை அரசாங்கம் மாறினால், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் விரிசல் ஏற்படக்கூடாது என்பதை உறுதி செய்யவே இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இலங்கைக்கு வருகைதந்ததாக கூறப்படுகிறது.

தேசிய பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்ள அவர் இலங்கை வந்திருந்தாலும், அவரின் பிரதான சந்திப்பு ஜனாதிபதி வேட்பாளர்களை இலக்காக கொண்டமைந்திருந்தது.

இதன்படி, ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரங்களே எஞ்சியுள்ள நிலையில், வலுவான அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான உள்ளகக் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் அரசியல் வட்டாரங்களில் குறிப்பிடப்படுகிறது.

திடீர் இலங்கை விஜயம்

இதன்படி, இந்தியப் பாதுகாப்பு பிரிவின் பிரதானியின் திடீர் இலங்கை விஜயத்தின் பின்னரே இந்த கலந்துரையாடல்கள் நடைமுறைப்படுத்தப்படுபதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னர் உயர் பதவிக்கு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பலம் வாய்ந்த ஒருவர் முன்மொழியப்பட்டுள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.

குறித்த பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை என்றால் எதிர்கட்சியின் மற்றொரு நபரை அதற்கு சம்மதிக்க வைக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அஜித் தோவலின் கலந்துரையாடலின் பின்னர், வடக்கிலுள்ள அரசியல் கட்சிகள் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தமது அரசியல் நிலைப்பாடுகளை மாற்றக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பங்களாதேஷில் ஏற்பட்ட திடீர் ஆட்சி மாற்றத்தால், இந்தியா சிக்கலுக்குள்ளாகியுள்ளதை போல இலங்கையிலும் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் அஜித் தோவலின் வருகை இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.

இராஜதந்திர பின்னணி

உயர்தர இராஜதந்திர பின்னணியில், வரலாற்று ரீதியாக அரசியல் பிளவுகளை எதிர்கொண்ட தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் மத்தியில் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை உணர்ந்து சிறுபான்மை சமூக எம்பிக்களை தோவல் எவ்வாறு நோக்கினார் என்பதை அவரது சந்திப்புக்கள் எடுத்துக்காட்டுகின்றது.

தேசிய அரசியல் அரங்கிற்குள் தங்கள் பிரதிநிதித்துவத்தையும் குரலையும் அதிகரிக்க கூட்டு அரசியல் உத்திகளை அவர் வலியுறுத்தியிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதில் வடக்கின் அரசியல் போக்கில் முழு கவனமும் செலுத்தப்பட்டது.

இதன் அடிப்படையிலேயே யாழின் 03 தீவுகளுக்கான கலப்பு மின் திட்டத்திற்கான முதலாம் கட்ட நிதியை இந்தியா வழங்கி தனது ஈடுபாட்டை தேர்தலுக்கு முன்னரே நிலைநிறுத்தியுள்ளது.

இலங்கையின் அரசியலானது கூட்டாகச் செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் அதே வேளையில், இந்தியாவின் செய்தியானது ஜனநாயக நெறிமுறைகளின் மேலோட்டமான விவரிப்புக்குள் ஆழமாக எதிரொலிக்கிறது.

NO COMMENTS

Exit mobile version